தி ஸ்டார் படப் பிடிப்பாளர்: “படங்களை அழிக்குமாறு போலீஸ்காரர்கள் என்னை கட்டாயப்படுத்தினர்”

போலீஸ்காரர்கள் குழு ஒன்று தம்மைச் சூழ்ந்து கொண்டு பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் அதிகாரிகள் அடிப்பதைக் காட்டும் படங்களை தமது கேமிராவின் நினைவு கார்டிலிருந்து அழிக்குமாறு கட்டாயப்படுத்திய போது தமது பாதுகாப்பு குறித்து மிகவும் அஞ்சியதாக முக்கிய ஆங்கில நாளேடு ஒன்றின் படப் பிடிப்பாளர் கூறியிருக்கிறார்.

“அவர்களில் சிலர் என்னைச் சூழ்ந்து கொண்ட போது மோசமான விஷயங்களும் நடக்கலாம். நான் பயந்து போயிருந்தேன்..”

“அவர்கள் என்னுடைய கேமிராவைக் கேட்டனர். நான் கொடுக்கவில்லை. என்னுடைய நினைவு கார்டைக் கேட்டனர். நான் அதனையும் கொடுக்கவில்லை.”

“அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை அடிப்பதை நான் பார்த்தேன், அவர்கள் என்னைத் தும்புறுத்தக்கூடும் என நான் அஞ்சினேன்,” என தி ஸ்டார் நாளேட்டின் படப்பிடிப்பாளரான பி புஷ்பநாதன் சுஹாக்காம் நடத்தும் விசாரணையின் போது கூறினார்.

தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படுவது மீது சுஹாக்காம் பொது விசாரணை நடத்தி வருகிறது.

ஜுலை 28ம் தேதி பேரணியின் போது தாம் மஸ்ஜித் ஜாமெய்க்-கில் கடமையில் இருந்ததாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களை சில அதிகாரிகள் அடித்ததைப் பார்த்ததாகவும் புஷ்பநாதன் சொன்னார்.

அவர் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடிக்கப்படுவதை படம் பிடித்ததார். அப்போது சீருடை அணிந்த ஒர் அதிகாரி அவரை அணுகி அந்தச் சம்பவங்களைப் படம் பிடிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

அடுத்து சீருடை அணியாத சிறப்பு போலீஸ் பிரிவு அதிகாரிகள் அவரைச் சூழ்ந்து கொண்டு அந்தப் படங்களை நீக்குமாறு அவரைக் கட்டாயப்படுத்தினர்.

“போலீஸ்காரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை அடிப்பதை நான் படம் பிடிக்கக் கூடாது என அவர்கள் விரும்பியிருக்கலாம்,” என்றார் புஷ்பநாதன்.