இலங்கை தமிழரிடம் கனிமொழி வாக்குவாதம்?

சென்னை: ‘டெசோ’ மாநாடு ஆய்வரங்கத்தில் வரைவுத் தீர்மானங்கள் மீது, காரசாரமான விவாதம் நடந்தது. ஈழம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்களுக்கு, வெளிநாட்டு பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிலர் தங்களது நாட்டின் தலைவர்களிடம் முடிவு கேட்டு தான், தீர்மானத்தில் கையெழுத்திடுவோம் என வாதிட்டனர்; ஒரு சிலர் வெளிநடப்பு செய்ய முயன்றனர். இருப்பினும், வரைவுத் தீர்மானங்களில் சில திருத்தங்களை கொண்டு வந்து இறுதித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில், “டெசோ’ மாநாடு குறித்த ஆய்வரங்கம், நேற்று முன்தினம் காலை, மூன்று மணி நேரம் நடந்தது. அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, சுவீடன், மொராக்கோ, சிங்கப்பூர், மலேசியா, நைஜீரியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து, 30க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

“டெசோ’ குழுவினர் மற்றும் ஈழத் தமிழர்களின் ஆதரவு தலைவர்களால் தயாரிக்கப்பட்ட வரைவுத் தீர்மானங்கள் மீது, ஆய்வரங்கத்தில் விவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் விவாதம், காரசாரமான விவாதமாக மாறியது.

கனிமொழி பேச்சு:வெளிநாடுகளின் பிரதிநிதிகள் கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு, “டெசோ’ அமைப்பு குழுவினர் பதில் அளித்தனர். ராஜ்யசபா எம்.பி., கனிமொழி பேசும் போது:

“இலங்கை அகதிகள், தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல இடங்களில் வசிக்கின்றனர். அகதிகளின் குழந்தைகளுக்கு கல்வி அறிவு பெற வேண்டும். அதற்கான போதுமான வசதிகள் கிடைக்கவில்லை. அகதிகள் சொந்தமாக தொழில்களும் செய்ய முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்கான வேலைகளும் சரியாகக் கிடைப்பதில்லை. எனவே, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். இலங்கைத் தமிழர்களை தெற்கு ஆசிய நாடுகள் பிரச்னையாகக் கருத வேண்டும். அகதிகள் தொடர்பான ஐ.நா., சபையின் ஒப்பந்தத்தையும் இந்தியா பின்பற்ற வேணடும்’ என்றார்.

கனிமொழியின் கருத்தை, வெளிநாட்டு பிரதிநிதிகள் சிலர் ஆமோதித்தனர். அதில் இலங்கைத் தமிழர் ஒருவர் பேசும் போது, “ஈழத்துக்கும், தமிழ் ஈழத்துக்குமே வித்தியாசம் தெரியாத மத்திய அரசு, 13வது திருத்தச் சட்டம் மூலம், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் என்று கூறுவது முட்டாள் தனமானது. தமிழ் ஈழத்தில் வாழும் தமிழர்கள் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை சிறுபான்மை இனத்தவர்கள் என்று கூற வேண்டாம்’ என்றார்.

உடனே கனிமொழி குறுக்கிட்டு, “13வது திருத்தச் சட்டத்தை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்பதற்கு, குறைந்தபட்ச ஒரு காரணத்தைக் கூற முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினார். உடனே இலங்கைத் தமிழர், “13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி தமிழர்களுக்கு தீர்வு பெறப்பட்டால் அது, இலங்கைத் தமிழர்களை சிங்களர்களிடம் நிரந்தரமாகவே அடிமையாக்கி விடும்’ என, ஆவேசமாக பேசினார். உடனே, அவரது கருத்து குறித்து சில சந்தேகங்களைக் கேட்க, மொராக்கோ, சுவீடன், நைஜீரியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் முயன்றனர். தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் குறுக்கிட்டு, “ஆய்வரங்கத்தில், “டெசோ’ பற்றி தான் விவாதிக்க வந்தோம். வேறு விஷயங்களை பேசுவதற்கு இந்தக் கூட்டத்தைக் கூட்டவில்லை’ என, அப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வெளிநடப்புக்கு முயற்சி:இதற்கிடையில் சில வரைவுத் தீர்மானங்களுக்கு, வெளிநாட்டு பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவாதம் நீண்டதால், சிலர் வெளிநடப்பு செய்ய முயன்றனர். சிலர் தங்கள் நாட்டுத் தலைவர்களிடம் கலந்து பேசிய பின் தான் கையெழுத்திடுவோம் என மறுப்பு தெரிவித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TAGS: