ஒபாமாவுக்காக ஓட்டுபோட வந்த 108 வயது பாட்டி!

அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தில் 108 வயது மூதாட்டி முதல் முறையாக வாக்களிக்கப் போகிறார். எழுதப் படிக்கத் தெரியாத அவருக்கு ட்ரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட எந்த அடையாள அட்டையும் இல்லை. அதனால் இதுவரை வாக்களிக்கவும் இல்லை. இந்த தடவை தேர்தல் விவாதங்களை கவனித்து வந்த அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததால், குடும்பத்தினர் கவுண்டி தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

மருத்துவர் சான்றிதழ்களுடன் அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வரும் உறவினரிடம் “நான் ஒட்டுப் போடப்போகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் சொல்லி வருந்துள்ளார். கறுப்பு இனத்தை சார்ந்த இந்த மூதாட்டி ஒபாமாவுக்கு வாக்களிப்பதற்காக வேண்டி இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டாராம்!

இதேவேளை, பல ஆண்டுகளுக்கு பிறகு கடும் போட்டி நிலவும் 2012 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று முடிவுக்கு வருகிறது. இதுவரை பல மாநிலங்களில் நேரிடையாகவும், தபால் மூலமாகவும் முன் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வந்தன.

தற்போதைய முன் வாக்குப்பதிவில் ஃப்ளோரிடாவில் 47 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 42 சதவீதம் ஒபாமா கட்சியினரும், 39.5 சதவீதம் ராம்னி கட்சியினரும் 18 சதவீதம் எந்த கட்சியையும் சாராதவர்கள். பெரும் கூட்டம் இருந்ததால், சில பகுதிகளில் முன்வாக்குப் பதிவு நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டது.

இன்னொரு முக்கியமான திருப்புமுனை மாநிலமான ஐயோவாவிலும் ஒபாமா கட்சியினர் 42 சதவீதம், ராம்னி கட்சியினர் 32 சதவீதம், பொது வாக்காளர்கள் 25.6 சதவீதம் என 6 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில், உட்கட்சி தேர்தல் முதல் அதிபர் தேர்தல் வரை ஒபாமாவுக்கு ஐயோவாவில் பெரும் ஆதரவு கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது

ராம்னிக்கு சாதகமாக திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட வட கரோலினா மாநிலத்தில் பதிவான 27 லட்சம் வாக்குகளில் 48 சதவீதம் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியை சார்ந்தவர்கள். 31 சதவீதம் ராம்னியின் குடியரசுக்கட்சியும் மீதம் 21 சதவீதம் பொது வாக்காளர்களும் ஆவர்.