தீபாவளி தினத்தில் கிலியேற்படுத்திய சிங்கள போர் விமானம்

தீபாவளி நாளன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் குண்டு வீச்சு விமானம் ஒன்று வட்டமடித்து, தாழப் பறந்து குண்டு வீசுவதைப்போல திடீரென வந்துசென்றிருக்கிறது. இதனால் அந்தப் பகுதி மக்களிடையே அச்சமும் பதட்டமும் ஏற்பட்டிருந்தது.

இந்த விமானம் என்ன காரணத்திற்காக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இவ்வாறு வட்டமடித்துப் பறந்து சாகசம் காட்டிச் சென்றது என்பது பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை.

இதேவேளை, மீள்குடியேற்றப் பிரதேசமாகிய வன்னிப் பிரதேசத்தில் தீபாவளி பண்டிகை பிரகாசிக்கவில்லை.

அங்கு முறையான தொழில் வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தினாலும், போதிய வருவாய் இல்லாததனாலும், பல இடங்களில் இன்னும் தற்காலிக வீடுகள் கூட அமைக்கப்படாத நிலையிலும், தாங்கள் இந்தத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட முடியவில்லை என பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள்.

குதூகலமாகத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு மனத்தளவில் இங்கே பலர் இன்னும் தயாராகவில்லை.

பல குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இன்னும் தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும் வைக்கப்பட்டிருப்பதனால், அவர்களின்றி தங்களால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாதிருப்பதாகவும் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.

TAGS: