ஐந்தாயிரம் கையொப்பம் போதும் விசாரணைகளை ஆரம்பிக்க!

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தருமாறு கோரி அமெரிக்க வெள்ளை மாளிகையிடம் அனைத்துலக மன்னிப்புச் சபை வழங்கிய கோரிக்கை மனு குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐயாயிரம் பேரின் கையொப்பத்துடன் குறித்த மனு கையளிக்கப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படுமென வெள்ளை மாளிகை அவ்வறிக்கையில் கூறியுள்ளது.

இலங்கையில் படையினர் மேற்கொண்ட போர்க் குற்றம் குறித்து அனைத்துலக விசாரணையை வலியுறுத்திவரும் அனைத்துலக மன்னிப்புச் சபை, போர்க் குற்ற விசாரணை நடத்த ஆதரவு தருமாறு வெள்ளை மாளிகையில் மனுவொன்றைக் கையளித்துள்ளது.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமாக வெள்ளை மாளிகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில், எதிர்வரும் 29-ம் தேதிக்கு முன்னதாக போர்க்குற்ற விசாரணை தேவை என்ற கோரிக்கை அடங்கிய மனுவை, ஐயாயிரம் பேரின் கையொப்பத்துடன் அனுப்பி வைத்தால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று அறிவித்திருந்தது.

இது இவ்வாறிருக்க இவ்வறிவித்தல் வெளியான கையோடு இணையத்தளம் மூலமாக சுமார் மூவாயிரம் பேர் தங்கள் சம்மதத்தை தெரிவித்து தகவல் அனுப்பியுளளனர்.

இதேவேளை இது இலங்கை மீதான அனைத்துலக விசாரணைக்கான அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா நிர்வாகத்தின் முதற்கட்ட நடவடிக்கை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.