இலங்கையில் வெள்ளத்தின் சீற்றம் இன்னும் குறையவில்லை; 41 பேர் பலி

lanka_floodஇலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர்.

வவுனியாப் பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மழையின் காரணமாக வீடுகளில் நீர் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் பாடசாலைகள் மற்றும் ஆலயங்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் மழை சற்று குறைந்து வெள்ளம் வடிந்து வந்தாலும், மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

அங்கு இன்னும் பலர், தொடர்ந்து முகாம்களில் தங்கியிருக்க வேண்டிய சூழல் உள்ளது என்று தமிழோசையின் மட்டக்களப்புச் செய்தியாளர் கூறுகிறார்.

முகாம்களில் தங்கியுள்ளவர்கள் சமைத்த உணவு தவிர வேறு எந்த நிவாரணமும் அரசால் வழங்கபப்டவில்லை என்று கூறுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இதுவரை அரச தரப்பில் அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ தங்களை பார்வையிட வரவில்லை என்று முகாம்வாசிகள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.

எனினும் இராணுவத்தினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு பலரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இரு ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்று ஒரு நிலை ஏற்பட்ட போது பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட இன்னும் முழுமையான நிவாரணங்கள் கிடைக்கவில்லை எனவும் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

TAGS: