நேபாள நாட்டின் போர்க் குற்றவாளி பிரித்தானியாவில் அதிரடியாகக் கைது

Nepal war crimesநேபாளத்தில் 2005ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போரின்போது சித்ரவதைகளைச் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பிரித்தானியாவில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு சஸ்ஸெக்ஸ் கவுண்டியில் செயிண்ட் லெனார்ட்ஸ் ஆன் சீ என்ற கடலோரத்து ஊரில் 46 வயதான இந்த நேபாளி வியாயழனன்று மெட்ரொபாலிடன் போலிஸ் படையைச் சேர்ந்த அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தின் முன்னாள் அரசாங்கத்தில் சம்பந்தப்பட்டிருந்தவர் இவர் என்றும், ஐக்கிய ராஜ்ஜியத்தில் இவருக்கெதிராக கொடுக்கப்பட்டிருந்த ஒரு புகாரின் பேரில் போலிசார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டனின் கிரிமினல் ஜஸ்டிஸ் சட்டம் 1988-ல் பிரிவு 134ஐ மீறும் வகையில் சித்ரவதைகளை செய்தார் என்ற சந்தேகம் இவருக்கெதிராக எழுப்பப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்கள் பற்றி பேசுகிற இந்த சட்டம் பிரிட்டனில் மிக அரிதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

வேறொரு நாட்டில் குற்றம் நடந்திருந்தாலும் அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இச்சட்டம் வழங்குகிறது.

பிரிட்டனுடன் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை என்றாலும்கூட, வெளிநாட்டில் ஒருவர் ஈடுபட்ட மனித உரிமை மீறலுக்காக அவரைக் கைது செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் வழங்குவதாக இந்தச் சட்டம் அமைந்துள்ளது.

போர்க்குற்றத்தில் ஈடுபட்டமைக்காக இதற்கு முன்னால், ஐக்கிய ராஜ்ஜியத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட கடைசி நபர் என்றால் அது ஆப்கானிய முன்னாள் ஆயுதக் கும்பல் ஒன்றின் தலைவர் எனலாம்.

ஆப்கானிஸ்தானில் சித்ரவதைகளைச் செய்தார், பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்தார் என்று ஃபர்யாதி ஸர்தாத் என்ற இந்த நபர் மீது 2005-ல் பிரிட்டனில் குற்றங்காணப்பட்டு இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான அதிகாரம் உள்ள பிரிட்டிஷ் போலிஸ் படை என்றால் அது மெட்ரொபொலிடன் பொலிஸ் படைதான்.

இதிலுள்ள பயங்கரவாத ஒழிப்பு கட்டளைப் பிரிவு தற்போதைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள நபர் காவல் நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர் வாழ்ந்துவந்த வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் போலிஸ் அறிக்கை கூறுகிறது.

நேபாளத்தில் பல ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போர் 2006ஆம் ஆண்டு முடிவுக்கு வந்திருந்தது.

இந்த யுத்தத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர், பல்லாயிரக்கணக்கானோர் சித்ரவதை செய்யப்பட்டும் இருந்தனர்.

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் நாட்டுக்குள்ளேயே அகதியாக ஆக வேண்டிய அவலம் ஏற்பட்டது. சுமார் 1400 பேரின் கதி என்ன என்றும் இன்றுவரை தெரியவரவில்லை.

இந்த உள்நாட்டு யுத்தத்தில் பெரும் அட்டூழியங்களில் ஈடுபட்டதாக அரச படைகள், மாவோயியவாதிகள் என்று இருதரப்பார் மீதும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.