முன்னாள் ஐஜிபி: எல்லா ‘திடீர் மரணங்களையும்’ கொலைகள் என புலனாய்வு செய்யுங்கள்

musaஉலு லங்காட்டில் ஜனவரி 23ம் தேதி பாதுகாவலரான சி சுகுமார் மரணமடைந்தது உட்பட எல்லா ‘திடீர் மரணங்களையும்’ கொலைகள் என புலனாய்வு செய்யுமாறு முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“திடீர் மரணம்’ சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நடத்தப்படும் புலனாய்வு கொலையைப் போன்றதாகவே இருக்க வேண்டும்,” என சுகுமார் பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது அவர் சொன்னார்.

சுகுமார், போலீஸ்காரர்களினால் தடுக்கப்பட்டு கைவிலங்கு மாட்டப்பட்ட பின்னர் அடிக்கப்பட்டதால் மரணமடைந்தார் எனச் சொல்லப்படுகின்றது.

அவரது மரணத்தில் தாங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர். அந்த விவகாரம் தொடர்பில் மரண விசாரணையை நடத்தப் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

“அவரது இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பு” மரணத்துக்குக் காரணம் சவப் பரிசோதனை முடிவுகள் காட்டியுள்ளன.

மரணத்துக்கான காரணத்தை உறுதி செய்ய முடியாத போதுதான் மரண விசாரணை நடத்தப்படும் என்பதை மூசா சுட்டிக் காட்டினார்.

“என்ன நிகழ்ந்தது என்பது நிச்சயமாகத் தெரியாவிட்டால் நடைமுறைகளுக்கு இணங்க மரண விசாரணை நடத்தப்படும். ஏனெனில் அப்போதுதான் தவறுகள் ஏதும் நிகழ்ந்துள்ளதா என்பதையும் அதற்கு பொறுப்பானவர்களையும் அடையாளம் காண்பதற்கும் மாஜிஸ்திரேட் ஆதாரங்களைப் பெற முடியும்.”

“உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாவிட்டால் நீங்கள் அதனைக் கொலை என வெறுமனே சொல்லக் கூடாது.”

பெட்டாலிங் ஜெயாவில் மூசா தாம் புரவலராக இருக்கும் மை வாட்ச் (MyWatch) என்ற அரசு சாரா அமைப்பின் நிருபர்கள் சந்திப்பில் பேசினார்.

‘குடும்பம் ஒத்துழைக்க வேண்டும்’

musa1மரண விசாரணையை புறக்கணிக்கப் போவதாக கூறியுள்ள சுகுமார் குடும்பம், போலீஸ் அந்த விவகாரத்தை கொலை என வகைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

என்றாலும் போலீஸ் புலனாய்வுக்கு குடும்பம் ஒத்துழைக்க வேண்டும் என மூசா கருதுகிறார்.

“அந்த மரணத்துக்கு யாராவது காரணம் குடும்பத்தினர் நினைத்தால் அவர்கள் போலீசாருக்கு உதவ வேண்டும்.  அல்லது புலனாய்வு முடிவுகளிலிருந்து மாறுபட்டிருந்தால் அவர்கள் சம்பவம் தொடர்பான சாட்சிகளைப் போலீசாருக்கு வழங்க வேண்டும்,” என்றார் அவர்.

சுயேச்சையான சவப்பரிசோதனையை மேற்கொள்வதற்கு தாய்லாந்து உடற்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ரோஜானாசுனன் சேவைகளை குடும்பத்தினர் நாடியுள்ளனர். அதற்கான ஒப்புதலையும் அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் வாக்குமூலம்கொடுத்த மூன்று நேரில் பார்த்த சாட்சிகள், சுகுமார் தம்மை விடுவித்துக் கொள்ளப் போராடிய போது போலீஸ் அதிகாரி ஒருவர் அவரது கழுத்தில் தமது பூட்ஸை வைத்திருந்தததைக் கண்டதாக கூறிக் கொண்டுள்ளார்கள்.