இலங்கை வங்கியின் சென்னைக் கிளை மீது தாக்குதல்

bank_of_ceylon_chennaiசென்னை எழும்பூரில் உள்ள, இலங்கை வங்கியின் கிளைக்குள் நேற்று வியாழன் மதியம் முகமூடி அணிந்த சிலர் புகுந்து, கண்ணாடி ஜன்னல்களைத் தடியால் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

சுவர் கடிகாரம் போன்ற சில பொருட்களும் சேதமடைந்திருக்கின்றன.

ஊழியர் இருவரும் தாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன, ஆனால் எவரும் தாக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அவ்வங்கித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எதனையும் எழுப்பவில்லை, துண்டுப் பிரசுரங்கள் எதனையும் விட்டுச் செல்லவில்லை. இதுவரை எவரும் அச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்கவும் இல்லை.

ஆனால் எழும்பூர் பகுதியில் அவ்வப்போது இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஏதாவது தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர், தமிழுணர்வாளர்களே அத்தகைய வன்முறையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

இப்போதும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வரும் வேளையில் வங்கி தாக்கப்பட்டிருப்பதால், மீண்டும் அத்தகைய குழுக்களையே சந்தேகிப்பதாகவும், ஆனால் இந்நிலையில் உறுதியாக எதனையும் கூற முடியாதெனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

TAGS: