சிங்கள மொழி நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரிய மனு நிராகரிப்பு

sri_lanka_supreme_courtவவுனியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் தமிழில் நடப்பதால், தன் மீதான வழக்கை சிங்கள மொழியைப் பயன்படுத்தும் வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என சிங்களர் ஒருவர் செய்திருந்த மனுவை இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பண மோசடி செய்ததாக தன் மீது வவுனியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலிசார் வழக்கு தொடர்ந்துள்ளதாக கொழும்பு அருகே வசிக்கும் சிங்களர் ஒருவர் இந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

தானும் தனது வழக்கறிஞரும் சிங்கள மொழி மட்டுமே அறிந்தவர்கள் என்பதால் வவுனியா நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கு விசாரணையை சிங்கள மொழியில் செயலாற்றும் வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

ஆனால் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு இந்த வழக்கை வவுனியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்திலேயே நடத்த முடியும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆவணங்களையும் சாட்சியங்களையும் மொழிபெயர்ப்பதற்காக பிரதிவாதிக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படும் நடைமுறையும் இருப்பதால், இந்த வழக்கை இடம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

TAGS: