தமிழக திரைப்படங்களை இலங்கையில் தடை செய்யக் கோரிக்கை

tamilcinemasrilankaactorsfastதமிழகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை இலங்கையில் திரையிட தடை விதிக்கப்பட வேண்டும் என்று ராவண சக்தி என்னும் கடும்போக்கு பௌத்த அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் கோரியிருக்கிறது.

இது குறித்த மனு ஒன்றை செவ்வாயன்று இலங்கை தணிக்கை சபையிடம் தாம் கையளித்ததாக ”ராவண சக்தி” அமைப்பின் செயலாளர் இத்தாகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

ரஜனிகாந்த், கமலஹாசன், சரத்குமார், விஜய் போன்ற பல நடிகர்கள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஒரு தனிநாட்டைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுத்துவருகிறார்கள் என்றும் இவ்வாறான தேசவிரோத சக்திகளின் திரைப்படங்களை இலங்கைக்குள் திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இத்தகைய திரைப்படங்களை இலங்கை திரையரங்குகள் திரையிடக் கூடாது என்றும் அதனை மீறும் திரையரங்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், இத்தகையை தடையை விதிக்கக்கூடிய கொள்கை ரீதியிலான தீர்மானங்களை அரசாங்கம் மாத்திரமே எடுக்க முடியும் என்று இலங்கை தணிக்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

TAGS: