மக்களுக்காக மாற்றம் செய்யாததால், மக்கள் தலைமைத்துவ மாற்றம் கோருகின்றனர்!

bersih-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 15, 2013.

நேற்று பிரதமர் நஜிப் துன் ராசாக்  அவரின்  அரசாங்கம்  மக்களுக்கு ஆக்ககரமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதால் நாட்டில் ஆட்சி மாற்றம்  அவசியமில்லை என்றார். ஆனால் மக்கள் மாற்றத்திற்கான அவசியத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டனர், ஆனால் பிரதமர் அதனை  உணர மறுக்கிறார்.

அவர் நாட்டு மக்களுக்கு  வழங்கியுள்ள பிரிம் 1 மற்றும் பிரிம் 2யை பிரதானமானதாக நினைக்கிறார் . அதுவே இத்தேர்தலுக்கு  மக்களை வாங்க போதுமானது என்று எண்ணுகிறார்,  மேலும் கோலாலம்பூர் இரட்டை கோபுரக் கட்டம், பினாங்கு  பாலம், கோலாலம்பூர்  அனைத்துலக விமான நிலையம், புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட  ஒருங்கிணைக்கப் பட்ட  டிபிஎஸ் (TBS) போக்குவரத்து மையம் ஆகியவைகளைச் சாதனையாகக் கூறுகிறார்.

பிரதமர் கூறும் இந்தச் சாதனைகளே  அரசாங்கத்தை மாற்றப் போதுமானதென மக்கள்  கருதுகின்றனர்.  ஒரு பிரதமராகப் பட்டவர்  நாட்டு மக்களின் உண்மையான பிரச்சனை என்ன என்று தெரியாமல் உயர்ந்த கட்டிடங்களையும்,  பாலங்களையும், ஸ்கோபியன் நீர்மூழ்கிகளையும் காட்டிக் கொண்டிருந்தால், அதனைப்  பார்த்துப் பரவசமடைய  மக்கள்  இன்னும்  60 ஆம் 70 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை.

12, 500 கோடி ரிங்கிட் கடன்

XavierJayakumarஉலக நாணய நிதியின் (IMF)  கணக்குப்படி 1998ம் ஆண்டில் 10,300 கோடிகளாக இருந்த நாட்டின்  கடன், இவ்வாண்டு இறுதியில் 546 பில்லியன் அல்லது 54600 கோடியை எட்டும் என்று எச்சரித்துள்ளது. நஜிப்பின்  நான்கே ஆண்டுகால ஆட்சியில் மட்டும் கடன் 125 பில்லியன் அதாவது 12,500 கோடி அதிகரித்துள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

இது பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப்பின் முதல் சாதனையாகும், அதேவேளையில்  இவரின்  பாரிசான்  அரசாங்கத்தின்  இதர சாதனைகளையும் கவனித்தால் மக்கள்  மாற்றத்திற்குக் காத்திருப்பதின்  காரணம் புரியும்.

இந்த நாட்டில் 34% விழுக்காடு தொழிலாளர்கள் மாத வருமானமாக 700 வெள்ளிகளையே பெறுகின்றனர். இது ஏழ்மைக் கோட்டுக்குக் கீழ் உள்ள வருமான  இலக்காகும், அந்த ஏழைகள் இன்னும் எத்தனை நாள்களுக்கு ஈரத் துணியை வயிற்றில் போட்டுக் கொண்டு  இரட்டை கோபுரத்தை  வேடிக்கைபார்த்துக்கொண்டிருப்பார்கள்.

சம்பள உயர்வு 2.6 விழுக்காடுதான்!

உலகளாவிய நிலையில் தொழிலாளர்கள் சம்பளம் 3.2 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது,  அதாவது, 2000 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை.  ஆனால், அதே காலக்கட்டத்தில் இந்நாட்டு தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை  2.6 விழுக்காடாகவே வைத்திருக்கின்றது  பாரிசான் அரசாங்கம். இது செல்வம் கொழிக்கும் நாடா?  2020 இல் முன்னேறிய நாடா? 2020 இல் நாட்டு மக்களின்  சராசரி வருமானமாக  45,000 வெள்ளி இருக்குமாம், அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு ஏழைகள், ‘’பிரிம், புரும்’’  கனவு காண வேண்டியதுதான்.

இந்நாட்டு தொழிலாளர்களுக்கு மக்கள் கூட்டணி குறைந்தபட்ச சம்பளமாக 1100 வெள்ளியை நிர்ணயத்தது.  அதைக்கூட கொடுக்க முடியால், பாரிசானின்  குறைந்தபட்ச சம்பளமாக  900 வெள்ளிகளை  அறிவித்தது.  அதனையும் அமல் படுத்த வழியில்லாமல் தேர்தல் முடியும்  வரை தள்ளிப் போட்டுள்ள அரசாங்கம் வாக்குறுதிகளைப் பற்றியும்  நம்பிக்கை பற்றியும் பேசுவது  வேடிக்கையாகவுள்ளது.

ஒரு முறை பிரிம்  கொடுக்க மூன்று முறை சீனி விலையை ஏற்றியதை  மக்கள் மறந்து விடுவார்களா? நான்கு  ஆண்டுகளுக்கு முன் கிலோ 1 வெள்ளி 45 காசாக  இருந்த சீனி  இப்பொழுது 2 வெள்ளி 50 காசாக விற்கிறது. கிலோ சீனிக்கு 20 காசுகள்  ஏற்றியதில் 700 மில்லியன் ரிங்கிட் உதவிப்பணம் அரசாங்கத்துக்கு  மீதப் பட்டதாகக் கூறினார் பிரதமர். ஆக மூன்று முறை சீனி விலையை ஏற்றி அதில் கிடைத்ததை வைத்துப் பிரிம் கொடுத்தால்.  தொடர்ந்து  பிரிம் கொடுக்க இன்னும் என்னென்ன பொருட்களின்  விலை எகிறிடும்  என்பது மக்களுக்குத் தெரியாதா? ஆக, அன்றாடம் வாழ்கைப் படகை ஓட்ட அல்லல் படும் மககளுக்கு மாற்றத்தின் அவசியம் என்னவென்று தெரியும்.

TAGS: