நைஜீரியா: மோதல்களில் சிக்கி 185 பேர் பலி

nigeria_violence_baga_fightingநைஜீரியாவின் வடக்கில் இஸ்லாமியவாத ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நடந்த உக்கிர சண்டையில் குறைந்தபட்சம் 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

சாட் நாட்டுடனான எல்லைக்கு அருகில் உள்ள பாகா என்ற ஊரில் ராக்கெட் எறிகுண்டு வீச்சுகள் மற்றும் பெருமளவான துப்பாக்கிச் சூட்டுடன் கடந்த வெள்ளியன்று கடும் சண்டைகள் மூண்டிருந்தன என்று அரசாங்கமும் இராணுவ அதிகாரிகளும் கூறுகின்றனர்.

போக்கோ ஹராம் இயக்கத்தைச் சேர்ந்த ஆயுததாரிகளை விரட்டுவதற்கு இராணுவத்தினர் முயன்றபோது இந்த மோதல்கள் வெடித்தன.

மோதல்களில் இருந்து தப்பிப்பதற்காக வெள்ளியன்று வாழ்விடங்களை விட்டு வெளியேறி அக்கம்பக்கத்தில் இருந்த காடுகளுக்குள் அவ்வூர்வாசிகள் ஓடியிருந்தனர்.

ஞாயிறன்று மதியம் அவர்கள் திரும்பிவந்து பார்த்தபோது வீடுகள் எல்லாம் அழிந்துபோயிருந்தன. மனிதச் சடலங்களும் விலங்குகளின் சடலங்களும் வீதிகளில் கிடந்தன. பாகா இதற்கு முன்பு மோதல்கள் இல்லாத ஒரு இடமாக இருந்துவந்தது.