அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டவரைக் காணவில்லை

edward_snowdenஅமெரிக்காவில் தொலைபேசிகள் மற்றும் இணையத் தளங்கள் ஊடாக ஒட்டுக் கேட்கப்பட்டமை குறித்த பெரும் ரகசியங்களை வெளியிட்ட முன்னாள் சிஐஏ உளவுத்துறை ஊழியர் தான் தங்கியிருந்த ஹொங்கொங் நாட்டு ஹொட்டலில் இருந்து காணாமல் போயுள்ளார்.

29 வயதான எட்வேர்ட் ஸ்நோவ்டன் அவர்கள் திங்களன்று தனது ஹொட்டலில் இருந்து வெளியேறியுள்ளார். அதன் பின்னர் அவரைக் காணவில்லை. ஆனாலும் அவர் இன்னமும் ஹொங்கொங்கிலேயே இருப்பதாக நம்பப்படுகின்றது.

அடக்குமுறையில் இருந்து மக்களைக் விடுவிக்க வேண்டிய கடப்பாடு தனக்கு இருப்பதாக முன்னதாக அவர் கூறியிருந்தார்.

பல லட்சக்கணக்கான தொலைபேசி அழைப்புக்களின் பதிவுகளை மேற்கொண்டமை மற்றும் இணைய தளங்களை கண்காணித்தமை ஆகிய நடவடிக்கைகளை அமெரிக்க உளவு நிறுவனங்கள் மேற்கொண்டதாக கடந்த வாரம் தகவல் வெளியாகியிருந்தது.

ஒரு கிரிமினல் விடயமாக கையாளப்படும் இந்த விவகாரம் அமெரிக்க நீதித்துறைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய உளவு சேவையின் இயக்குனர் அலுவலகம் அறிவித்திருந்தது.

அதேவேளை, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை இணையதளத்தில் பதியப்பட்டிருந்த ஒரு மனுவில் ஸ்நோவ்டனுக்கு உடனடியாக மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று முப்பதினாயிரம் பேர் கையெழுத்திட்டுக் கோரியிருந்தனர்.

எப்படியிருந்தபோதிலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்காக அரசாங்கம் தொலைபேசி பதிவுகளைச் செய்தல் ஏற்றுக்கொள்ளத்தக்கதே என்று வாஷிங்டன் போஸ்ட் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்று கூறியிருந்தது.