முள்ளிவாய்க்கால் கொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை! தேர்தல் மூலம் மக்கள் நிரூபிக்க வேண்டும்

eelam22713bமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் தமிழ் மக்களின் கொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகிற்கு கூறும் ஒரு கருத்துக் கணிப்பாகவே வடக்கு மாகாண சபைத் தேர்தலை பார்கின்றோம் எனத் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அராலித் தெற்கு களவத்துறை விளையாட்டுக் கழகம் ஆடிப்பிறப்பை முன்னிட்டு நடாத்திய விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

23 வருடங்களின் பின்னர் பிரிக்கப்பட்ட வடக்கு தேர்தலை நோக்கி நாம் காத்திருக்கின்றோம். அதில் என்ன இருக்கிறது? அதில் என்னென்ன பறிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எமது மக்கள் சுயாட்சியை ஆள முடியுமா? உள்ளிட்ட பல விடயங்கள் சவலாக உள்ளன.

மாகாண சபையின் அதிகாரங்களை திவிநெகும என்ற சட்டமூலத்தின் மூலம் பறித்து எடுத்து விட்டார்கள். காணி அதிகாரம் இருக்கு என்கின்றனர். ஆனால் இல்லை என்று சொல்கின்றனர்.

இதனைத் தான் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையில் முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாள்;. நித்திரை கொள்வதைத் தவிர என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று சொன்னார்.

பிரிந்த கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக இருந்த பிள்ளையான் என்னால் சாதாரண தொழிலாளியைக் கூட நியமனம் செய்ய முடியவில்லை என்று சொன்னார்.
2009 இற்கு பின்னர் பல முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசியும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்குரிய தீர்வினை வழங்கத் தயாரில்லை.

இவ்வளவு தெரிந்த பின்னரும் மாகாண சபைக்காக போட்டியிடுவதன் மூலம் எங்களுடைய தேசிய அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படப் போவதில்லை.

நாங்கள் பிறந்து வளர்ந்த எங்கள் தாய மண்ணில்,எங்கள் சுயநிர்ணம் அங்கீகரிக்கப்பட்டு எங்களுக்கு தீர்வு கிடைக்காத வரைக்கும் எந்த தேர்தல்கள் ஊடாகவும் எதனையும் அடைய முடியாது.

வடமாகாண சபை தேர்தல் மூலம் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை ஈடு செய்ய முடியுமா? அவர்களது உயிர்களுக்கு என்ன சொல்ல முடியும்.

முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட மக்களின் கொலைகளுக்கு ஒரு சர்வதேச விசாரணை தேவை என்பதில் நாங்கள் திடமாக இருக்கின்றோம். ஒரு இனஅழிப்பு இந்த மண்ணில் நடைபெற்றது. அதற்கு சர்வதேச விசாரணை தேவை.

அதற்கு நாங்கள் தமிழர்கள் ஒரு அணியாக நிற்கிறோம் என்பதை உலகிற்கு சொல்வதற்கான கருத்துக் கணிப்பாகவே இந்த தேர்தலை நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் கூட்டமைப்பின் வலி.மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ரி.நடனேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பதோடு, மென்பந்துப் போட்டியில் பொற்பதி இந்து விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

TAGS: