மக்களின் மனநிலையை அறிய டாக்சி டிரைவர் ஆன நார்வே பிரதமர்

norwayநார்வே : நாட்டு மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய, நாட்டின் பிரதமரே, டாக்சி டிரைவராக மாறிய சம்பவம், நார்வே மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நார்வே பிரதமர், ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க்.

“தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்ற பின், இவர், நாட்டு மக்களின் வளர்ச்சியை கண்டு கொள்ளவில்லை’ என, பரவலாக புகார் எழுந்துள்ளது. அடுத்த மாதத்துடன், இவரது ஆட்சி காலம் முடிகிறது.

“ஸ்டோலன்பெர்க் மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவருக்கு வரும் தேர்தலில், குறைந்த அளவு ஓட்டுகளே கிடைக்கும்’ என, கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டோலன்பெர்க், நாட்டு மக்களின் மனநிலையை புரிந்து, அதற்கேற்ப தேர்தல் பிரசார வியூகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளார்.

இதனால், மக்களின் கருத்துக்களை, நேரடியாக அறிய விரும்பிய, ஸ்டோலன்பெர்க், டாக்சி டிரைவர் போல சென்று, பொதுமக்களை தன் காரில், சவாரிக்கு ஏற்றினார். அதில், மக்களின் கருத்துக்களை பதிவு செய்ய, ரகசிய கேமராவும் வைத்திருந்தார்.

பல பேரும் இவரை அடையாளம் காணாமல், தாங்கள் நினைத்தவற்றை பேசினர். எனினும், ஒரு சிலர் ஸ்டோலன்பர்கை அடையாளம் கண்டுவிட்டனர்; பிரதமர் என்ற முறையில், மக்களின் கருத்துக்களை அறிய முற்பட்டதற்கு, பாராட்டுகளை தெரிவித்த அவர்கள், நாட்டில் நடக்கும் குற்றங்கள் மற்றும் குறைகளை பிரதமரிடம் தெரிவித்தனர். ஸ்டோலனின் டாக்சியில் பயணித்த யாரிடமும் அவர், பணம் வாங்கவில்லை.

இதுகுறித்து, ஸ்டோலன்பெர்க் கூறியதாவது: மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் இடம் அவர்கள் பயணிக்கும் டாக்சிகளில் மட்டுமே. டாக்சி டிரைவர்களும், விடாமல் எதையாவது பேசிக் கொண்டேயிருப்பதால், மக்களும் அவர்களிடம், ஆட்சியாளர்களின் நிறை குறைகளை கொட்டித் தீர்க்கின்றனர்.

எனவே, மக்களின் குறைகளையும், அவர்களின் தேவையையும் நேரடியாக அறிய, பிரதமர் என்ற முகமூடியை கிழித்துவிட்டு, டிரைவர் வேஷத்தில் சென்றேன். இந்த வேஷத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

மக்கள் பலரும் தங்கள் குறைகளை மனம் திறந்து வெளிப்படுத்தினர். நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களின் குறையை உடனடியாக தீர்த்து வைப்பேன். இவ்வாறு, ஸ்டோலன்பெர்க் கூறினார்.

“பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், மக்களை பற்றி சிந்திக்காத அரசியல் வாதிகள், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் மீது அக்கறை இருப்பது போல நடிப்பதில், ஸ்டோலன்பெர்க்கும் விதிவிலக்கல்ல’ என, சிலர் அலுத்துக் கொண்டனர்.