மோடி யாழ் விஜயம்: போராட்டத்தில் குதித்த மக்கள்

jaffna_protestபாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகையை முன்னிட்டு யாழ் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்று காலை 10 மணியளவில் யாழ் நகரில் கவனயீர்ப்புப்  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தியே இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டமானது யாழ் நகரிலே ஆரம்பமாகி நடை பவனியாக இந்தியத் துணைத்தூதரகத்தைச் சென்றடைந்தது.

போராட்டகாரர்களால் இந்தியத் துணைத்தூதரகத்தில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=CSvvj_ZG6QA

அவ் மகஜரிலே குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தங்களின் வருகையின் மூலம் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு துன்பங்களுக்கு விடிவு கிட்டுமென்று நாம் நம்புகின்றோம்.

இலங்கை அரசாங்கத்திற்கு தாங்கள் அழுத்தம் கொடுத்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் அத்துடன் தாங்கள் நேரடி கவனம் எடுத்து தீர்க்க வேண்டிய பிரச்சனைகளும் உண்டு என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.

நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் தீர்க்க்படாத பிரச்சினையாக தமிழ் மக்களின் அரசியல்ப் பிரச்சினையாக இருந்து வருகின்றது.

இவ்அரசியல்ப் பிரச்சினை காரணமாக நாட்டில் எற்பட்ட போர்ச்சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் அந்த போர்ச்சூழலுக்குள்ளும் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு வாழ்ந்து வரும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை தாங்கள் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதே தங்களின் வருகையை முன்னிட்டு நாம் எதிர்பார்க்கும் விடயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: