நெகிரி செம்பிலான் அம்னோ காலை வாரியது- யார்தான் மந்திரி பெசார்?

அம்னோ தலைமையிலான நெகிரி செம்பிலான் பிஎன், மந்திரி பெசார் அமினுதின் ஹாருனுக்கு ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து யாங் டி-பெர்டுவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிருடன் சந்திக்க உள்ளளது .

அதன் தலைவர் ஜலாலுதீன் அலியாஸ் கூறுகையில், “பக்காத்தான் ஹராப்பான் மாநிலத்தை தொடர்ந்து வழிநடத்தினால் எதிர்க்கட்சியாக மாற தயாராக உள்ளோம்.”என்றார்.

இந்த நடவடிக்கையானது மந்திரி பெசார் பதவியைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும், மாறாக நெகிரி செம்பிலானின் பாரம்பரிய நிறுவனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் கூறினார்.

மந்திரி பெசார் (அமினுதீன்) அவர்களுக்கு நாங்கள் அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்து மாண்புமிகு இளவரசருக்கு தெரிவிப்பதற்காக, அவரைச் சந்திக்க ஒரு விண்ணப்பத்தை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.

“எனக்கு இன்னும் சந்திப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை, மேலும் நெகிரி செம்பிலானின் மாண்புமிகு யாங் டி-பெர்டுவான் பெசார் அவர்கள் முன் எந்த நேரத்திலும் ஆஜராக நான் தயாராக இருக்கிறேன்,” என்று அவர் இன்று செரம்பானில் உள்ள அம்னோ தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

நேற்று, நெகிரி செம்பிலானில் உள்ள 14 அம்னோ-பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள், அமினுதீனின் தலைமை மீது நம்பிக்கை இழந்ததைத் தொடர்ந்து, அவருக்கான தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றனர்.

இது தொடர்பாக மாநில சட்டமன்ற சபாநாயகர் மற்றும் மாநில செயலாளருக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்படும் என்று ஜலாலுதீன் கூறினார்.

“நாங்கள், நெகிரி செம்பிலான் மாநில அரசின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களையும் முழுமையாக ஆதரித்து பாதுகாக்கிறோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். மேலும், மக்களின் நலன் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தும் அதே வேளையில், மாநில நிர்வாகத்தில் தனது பங்கை திறம்பட ஆற்றக்கூடிய ஒரு நிலையான அரசாங்கத்தை நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பில், மேலும் 12 மாநில அம்னோ தலைவர்களும் கலந்துகொண்டனர்.

நேற்றைய அறிவிப்பைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலானில் உள்ள ஐந்து பெரிகாத்தான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அரசாங்கத்தை அமைப்பதற்காக அம்னோ மற்றும் பிஎன் உடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

‘இது திட்டமிடப்படவில்லை’

மேலும் கருத்து தெரிவித்த ஜலாலுதீன், அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகள் பிஎன் உடன் முன்பே திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் கருத்தை நிராகரித்தார்.

அவர்களின் நடவடிக்கைகள் ஒரு “பின்வாசல் அரசாங்கத்தை” அமைப்பதற்கான முயற்சி என்ற குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.

“பின்வாசல் அரசாங்கம் என்பது எதிர்க்கட்சியாக இருந்து அரசாங்கமாக மாறுவதாகும். நாங்கள் ஏற்கனவே அரசாங்கத்தில் இருக்கிறோம், எனவே நாங்கள் அதைச் செய்வதற்கு எந்தக் காரணமும் இல்லை.”

“இது கட்சியின் கொள்கைகளைப் பாதுகாப்பதற்காகவே,” என்றும் அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், அனைத்து பிஎன் செயற்குழு உறுப்பினர்களும் இன்று தங்கள் அலுவலகங்களைக் காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜலாலுதீன் கூறினார்.

மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் பதவியை வகிக்கும் பிஎன் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பிப்பார்கள்.

அனைத்து செயற்குழு உறுப்பினர்களையும் மற்றும் பிரதி சபாநாயகரையும் தங்களது அலுவல் வாகனங்களைத் திருப்பிக் கொடுக்குமாறும், அலுவலகங்களைக் காலி செய்யுமாறும், மேலும் வழங்கப்பட்ட அனைத்து வசதிகளையும் திரும்ப ஒப்படைக்குமாறும் நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.

மாநிலத்தின் நலன் மற்றும் மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு, மாநில ஆட்சியாளரின் ஆணைப்படி அமினுதீன் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக நீடிப்பார் என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று முன்னதாக உறுதிப்படுத்தினார்.