தைப்பிங் சிறைக் கலவரம் குறித்த சுஹாகம் அறிக்கைக்குப் பதிலளிக்காத சிறைத்துறைக்குக் கண்டனம்

கைதி ஒருவர் பலியாவதற்குக் காரணமான தைப்பிங் சிறைக் கலவரம் குறித்து மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகம்) வெளியிட்ட முக்கியக் கண்டுபிடிப்புகளுக்குப் பதிலளிக்கத் தவறிய சிறைத்துறையை கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கடுமையாகச் சாடியுள்ளார்.

சுஹாகமின் கண்டுபிடிப்புகளுக்குப் பதிலளிக்கும் விதமாக ஜூன் 15 அன்று சிறைத்துறை வெளியிட்ட அறிக்கை ஆழ்ந்த ஏமாற்றமளிக்கிறது என்று கூறிய லிம், ஆணையம் எழுப்பிய கடுமையானப் பிரச்சினைகளுக்கு அந்த அறிக்கை எந்தப் பதிலையும் அளிக்கவில்லை என்றார்.

ஒரு சிறைக் காவலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது மற்றும் பிற ஐந்து அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர் என்ற சிறைத்துறையின் மீண்டும் மீண்டும் கூறப்படும் விளக்கம் போதுமான பதிலல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் 19 முதல், தைப்பிங் சிறைக் காவலர் ரின்டி ஓநெல் விக்டர் மீது, கைதி கான் சின் எங் மரணத்திற்குக் காரணமானதாக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 304(B)-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு ஏற்கனவே தெரியும்.

இந்தத் துறை ஏதோ ஒரு பெரிய அறிவிப்பைப் போலவோ அல்லது புதிய வெளிப்படைத்தன்மைக்கான சான்றாகவோ பழைய தகவல்களையே மீண்டும் மீண்டும் கூறத் தேவையில்லை,” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டிஏபி நாடாளுமன்ற உறுப்பினரான இவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது மட்டுமே இங்கிருக்கும் பிரச்சினை அல்ல, மாறாக சுஹாகம் எழுப்பியுள்ள பரந்த அளவிலான குற்றச்சாட்டுகள்தான் முக்கியப் பிரச்சினை என்றார்.

அதிகப்படியான உடல்ரீதியான வன்முறை, அதிகார துஷ்பிரயோகம், அலட்சியம், மருத்துவச் சிகிச்சை அளிக்கத் தவறியது, மருத்துவப் பதிவுகளை மோசடி செய்தது மற்றும் தவறான போலிஸ் புகார்களைப் பதிவு செய்தது போன்ற குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.

இருப்பினும், சிறைத்துறை தனக்குச் சாதகமான பாதுகாப்பான வழியையே தேர்ந்தெடுத்துள்ளது. அங்கு எந்த ஒரு மன்னிப்பும் கேட்கப்படவில்லை, சுஹாகமின் கண்டுபிடிப்புகள் குறித்த தெளிவான அங்கீகாரமும் இல்லை, மேலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்தக் கலவரம் குறித்து மேல் விசாரணை நிலுவையில் இருக்கும் வரை, இச்சம்பவம் நடந்த நேரத்தில் தைப்பிங் சிறை இயக்குநராக இருந்தவரையும், தற்போது ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை எதிர்கொண்டுள்ள ஐந்து அதிகாரிகளையும் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று லிம் வலியுறுத்தினார்.

தவறான போலிஸ் புகார்களை அளித்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும். மருத்துவப் பதிவுகளை மோசடி செய்தவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு ஹால் B-யிலிருந்து பிளாக் E-க்கு மாற்றும் நடவடிக்கையின் போது, 100-க்கும் மேற்பட்ட தைப்பிங் சிறைக்கைதிகள் சுமார் 60 சிறைக்காவலர்களால் தாக்கப்பட்டனர்.

கைதி கானின் மரணம் தொடர்பாக ரின்டி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ள நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய பிற சிறைக்காவலர்கள் மீதும் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சுஹாகம் (Suhakam) கோரிக்கை விடுத்துள்ளது

 

 

 

-fmt