மலேசியா செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டு மையமாக மாற முடியும்

மலேசியாவின் குறைக்கடத்தி துறையின் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களது கவனத்தைச் செலுத்தி வருவதால், செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாட்டிற்கான ஒரு மையமாக மலேசியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மலேசிய குறைக்கடத்தி தொழில் கூட்டமைப்பு இன்று வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப விநியோகச் சங்கிலி மீதான வரிகள் போன்ற புவிசார் அரசியல் பதற்றங்களின் தாக்கம் மற்றும் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்து வருவது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மலேசியா தனது நாட்டில் உற்பத்தி ஆலைகளை அமைப்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அமெரிக்கா, சீனா மற்றும் உலகின் பிற நாடுகளுக்கு “சேவையாற்ற” ஒரு நல்ல வாய்ப்பைப் பெற்றுள்ளதாக மலேசிய குறைக்கடத்தி தொழில் கூட்டமைப்பு தலைவர் வாங் சியூ ஹை தெரிவித்துள்ளார்.

பினாங்கு உள்ளிட்ட மலேசியாவின் குறைக்கடத்தி நிலப்பரப்பு குறித்து விளக்குவதற்காக சீனா, ஐரோப்பா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு நிறுவனங்களுடன் மலேசிய குறைக்கடத்தி தொழில் கூட்டமைப்பு தொடர்ந்து அடிக்கடி சந்திப்புகளை நடத்தி வருவதாக வாங் கூறினார்.

நெதர்லாந்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், குறிப்பாக மேம்பட்ட சிப்களை தயாரிக்கப் பயன்படும் அதி-புற ஊதா லித்தோகிராபி இயந்திரங்களை வணிக ரீதியாக வழங்கும் டச்சு நிறுவனமான ஏஎஸ்எம்எல் நிறுவனத்திற்கு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மலேசியாவின் மீது ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற பல முதலீட்டாளர்களை நாம் இனிப் பார்க்கப் போகிறோம். நம் நாட்டு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு  அவர்களுக்குப் பொருட்களை விநியோகிக்க அல்லது அவர்களுடன் இணைந்து பணியாற்ற இதுவொரு நல்ல வாய்ப்பாகும்.

அந்நிய முதலீட்டாளர்கள் பெற்றிருக்கும் அந்தத் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை என்பதால், நம் நாட்டு நிறுவனங்களை அவர்களுடன் இணைந்து செயல்படுமாறு நான் ஊக்குவிக்கிறேன். அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதே சிறந்த வழியாகும்,” என்று இங்குள்ள ஜென் ஹோட்டலில் நடைபெற்ற ‘பினாங்கு பொருளாதார மன்றம் 2026’ நிகழ்வின் குழு விவாத அமர்வில் வாங் கூறினார்.

சீனாவின் அதிவேகத்தை முன்மாதிரியாகக் கொள்ளுங்கள்

குறைக்கடத்தி சார்ந்த முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில், பினாங்கு மற்றும் ஒட்டுமொத்த மலேசியாவும் சீனாவிற்கு இணையாக அதிவேகமாகச் செயல்பட வேண்டும் என்றும் வாங் வலியுறுத்தினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டில், தான் இன்டெல் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தபோது, புதிய முதலீட்டு இடங்களைத் தேடும் நோக்கில் சீனாவின் செங்டு நகரத்திற்குச் சென்றதை அவர் நினைவு கூர்ந்தார்.

அப்போது, அந்தச் சீன நகரத்தில் குறைக்கடத்தி தொழில்துறையை ஆதரிப்பதற்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை என்பதைக் கவனித்த வாங், செங்டுவிலிருந்து இன்டெல் நிறுவனத்தின் குறைக்கடத்தி தயாரிப்புகளை அமெரிக்காவிற்கு எவ்வாறு ஏற்றுமதி செய்வது என்று அன்றைய மேயரிடம் கேட்டதையும் நினைவு கூர்ந்தார்.

தயாரிப்புகள் இரயில் மூலம் ஷாங்காய்க்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவிற்கு கப்பல் மூலம் அனுப்பப்படும் என்றும், இந்த முழு செயல்முறைக்கும் குறைந்தது 48 மணிநேரம் ஆகும் என்றும் தன்னிடம் கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதற்கு நான், ‘அது சாத்தியமில்லை. நான் இங்கு முதலீடு செய்ய வேண்டுமானால், நீங்கள் போக்குவரத்தை இன்னும் வேகப்படுத்த வேண்டும். செங்டுவிலிருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்களை இயக்க முடியுமா, அல்லது ஒரு சர்வதேச விமான நிலையத்தை உருவாக்க முடியுமா?’ என்று கேட்டேன். நாங்கள் அவர்களுக்கு இந்த பரிந்துரைகளை வழங்கினோம், அவர்களும் அவற்றை செயல்படுத்துவதாக உறுதியளித்தனர், என்று அவர் கூறினார்.

அதன் பிறகு, 2019-ஆம் ஆண்டில் உள்கட்டமைப்பு முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்காகத் தான் மீண்டும் செங்டு நகரத்திற்குச் சென்றபோது, அந்தச் சீன நகரம் மலேசியாவை விட எந்த அளவுக்கு முன்னோக்கிச் சென்றுள்ளது என்பதைக் கண்டு வியந்ததாக வாங் கூறினார்.

சீனா தனது பணிகளை அதிவேகத்தில் (super speed) செய்து வருகிறது. பினாங்கும் மலேசியாவும் அதே போன்ற அதிவேகத்தில் நகர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இல்லையெனில், நாம் பின்தங்கி விடுவோம், என்று அவர் கூறினார்.

 

 

 

 

 

-fmt