நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று, அடுத்த மாநில அரசை அமைப்பதற்கான மக்களின் ஆணையப் பெற்ற பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு பக்காத்தான் ஹரப்பான் தலைவர் அன்வார் இப்ராகிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி மீதும், எட்டு ஆண்டுகள் மந்திரி பெசாராகப் பணியாற்றிய அதன் மாநிலத் தலைவர் அமினுடின் ஹாரூன் மீதும் நம்பிக்கை வைத்த நெகிரி செம்பிலான் மக்களுக்கு அன்வார் நன்றி தெரிவித்தார்.
அந்தக் காலம் முழுவதும், நல்லாட்சி, ஸ்திரத்தன்மை மற்றும் மக்களுக்குப் பயனளிக்கும் மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சிறந்த நிர்வாக பாரம்பரியத்தை பக்காத்தானை விட்டுச் சென்றுள்ளது, என்று அவர் கூறினார். நெகிரி செம்பிலானின் முன்னேற்றத்திற்காக இது தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.
மாநிலத் தேர்தலில் பங்கேற்ற அனைத்து வாக்காளர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவர்களின் பங்கேற்பு ஜனநாயக செயல்முறையின் ஒரு முக்கிய அங்கமாகும் என்றும் விவரித்தார்.
பிரதமருமான அன்வார், நெகிரி செம்பிலான் மாநிலத்தினதும் அதன் மக்களினதும் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதற்காக, புதிய நெகிரி செம்பிலான் அரசாங்கத்திற்கு கூட்டரசு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிப்பதோடு ஒத்துழைப்பும் வழங்கும் என்று கூறினார்.
இன்றைய மாநிலத் தேர்தலில் பாரிசான் மற்றும் பாஸ் தலைமையிலான பெரிகாத்தான் நேஷனல் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டணி வெற்றியைப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், இரண்டு தவணைகளுக்குப் பிறகு பக்காத்தான் ஹரப்பானின் மாநில ஆட்சிப் பிடியை முடிவுக்குக் கொண்டு வர மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையையும் பெற்றுள்ளது.
ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவதில்லை என்ற உடன்பாட்டை எட்டிய பிறகு, பிஎன்-பிஎன் கூட்டணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
36 இடங்களைக் கொண்ட மாநிலச் சட்டமன்றத்தில் இக்கூட்டணி 25 இடங்களை வென்றுள்ளதாக அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ரப் வஜ்டி டுசுகி தெரிவித்தார்; இதில் பாரிசான் 18 இடங்களையும், பெரிகாத்தான் 7 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. பக்காத்தான் கூட்டணி 11 இடங்களைப் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.
-fmt
























