முஸ்லிம் தீவிரவாதம் இலங்கைக்கு அச்சுறுத்தலா?

gotabhaya-rajapakseஇலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதாக பாதுகாப்புச் செயலர் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து முஸ்லிம் அரசியல் தலைமைகள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள் இதற்கெதிராகக் கண்டனம் தெரிவித்திருந்தாலும் பின்னர் தம்மைத் தாமே அடக்கிக் கொண்டு விட்டார்கள். எதற்காக அவர்கள் வாயைமூடிக் கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

முஸ்லிம் தீவிரவாதம் என்ற பிரச்சனை இலங்கைக்கு இப்போது பெரும் தலைவலியாக மாறி வருவதை உணர முடிகிறது.

போருக்குப் பிந்திய இலங்கை எதிர்கொள்ளும் சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும் என்ற தலைப்பில் இம்மாத தொடக்கத்தில் இலங்கை இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில் தான் அவர் இந்தக் கருத்தைக் கூறியிருந்தார்.

இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழ் மற்றும் முஸலிம்களில் ஒரு பகுதியினர் தங்களை இலங்கையர்களாகப் பார்ப்பதில்லை என்றும் அவர்கள் இவ்வாறு தங்களை அந்நியப்படுத்திக் கொள்வதால் தான் பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தில் கடும்போக்கு நிலைகொண்ட குழுக்கள் உருவாகின்றன என்றும் அவர் கூறியிருந்தார்.

இது இலங்கையில் போருக்குப் பின்னர் தீவிரம் பெற்றுள்ள சிங்கள பௌத்த அடிப்படை வாத எழுச்சியை நியாயப்படுத்தும் கருத்தாகவே கொள்ளப்படுகிறது.

அண்மைக்காலத்தில் இலங்கையில் மதரீதியான பதற்றநிலை அதிகரித்து வருகிறது என்ற கருத்து சர்வதேசஅளவில் வலுப்பெற்றுள்ளது.

இலங்கை அரசாங்கம் மறுத்தாலும் கூட ஐநா உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் அறிக்கைகளில் மத சகிப்புத் தன்மை குறைந்து பதற்றநிலை அதிகரித்துள்ளது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு வந்து ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா பலமுறை இத்தகைய சம்பவங்களைச் சுட்டிக்காட்டி கண்டித்திருந்தது. கவலை வெளியிட்டிருந்தது.

ஆனாலும் பரவலாக முஸ்லிம்களுக்கும் கிறீஸ்தவர்களுக்கும் எதிரான வன்முறைகள் அநுராதபுரத்தில் இருந்து கிராண்டபாஸ் வரை தொடர்ந்து வந்துள்ளன.

இத்தகைய வன்முறைகளுக்கு அண்மைக்காலத்தில் தோற்றம் பெற்ற இராவண பலய பொதுபலசேனா போன்று பௌத்த அடிப்படைவாத அமைப்புகளே காரணமாக இருப்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல.

எனினும் இந்த அமைப்புகள் மீது அரசாங்கம் சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை.

மென்போக்கு காட்ப்படுகிறது அல்லது அவற்றை அரவணைக்கும் போக்கு உள்ளதாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன.

இத்தகைய பின்னணியில் தான் தமிழர்களும் முஸ்லிம்களும் தம்மை இலங்கையர்களாகப் பார்ப்பதில்லை என்றும் அவர்கள் தம்மை அந்நியப்படுத்திக் கொள்வதால் பௌத்த கடும்பேதாக்காளர்கள் உருவாவதாகவும் கூறுகின்றனர்.

அதாவது பௌத்த அடிப்படைவாதம் கடும்போக்குவாதம் ஆகியவற்றை நியாயப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே அவரின் கருத்து வெளிப்படுகின்றதே தவிர அதைக் கண்டிக்கவோ ஒடுக்குவதற்கான வழிமுறைகள் பற்றியோ குறிப்பிடவில்லை.

பௌத்த மதக் கோட்பாட்டுக்கு முரணான வகையில் பௌத்த அடிப்படைவாதம் ஆசியாவில் வலுப்பெற்று வருகிறது என்ற உண்மை தெரியாத விடயமல்ல.

அதற்கு இலங்கையும், மியன்மாரும் தான் மிகச்சிறந்த உதாரணம்.

இலங்கையில் போருக்குப் பின்னர் வேரூன்றத் தொடங்கியுள்ளது பௌத்த அடிப்படைவாதம்.

மியன்மார் ஒருபடி மேலே பெருமளவு முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொன்றும் ஆயிரக்கணக்கானோரை அகதிகளாக்கும் அளவுக்குச் சென்றுள்ளது.

பௌத்தமதம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைதியையும் அகிம்சையையும் தான் போதிக்கின்றது.

அந்த அகிம்சை வழியில் நடக்க வேண்டியவர்கள் தான் இரு நாடுகளிலும் பௌத்த அடிப்படைவாதத்தையும் தீவிரவாதத்தையும் முன்னெடுப்பவர்களாக மாறிவருகின்றனர்.

தமிழர்கள் தமது உரிமைக்காக அகிம்சை வழியில் பேராடிய போது அதற்கு வன்முறை மூலம் பதிலடி கொடுக்கப்பட்ட போது தான் ஆயுதப் போராட்டம் உருவானது.

அதுபோலத்தான் இப்போது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையும் முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை அகிம்சைத் தத்துவத்தை போதிக்கும் பௌத்த மதத்தின் பாதுகாவலர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்பவர்கள் சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பதால் தான் சிறுபான்மைச் சமூகத்தினர் அந்நியப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலடி கொடுத்திருந்தார்.

பௌத்த சிங்கள கடும் போக்காளர்கள் மத்தியில் உள்ள கடும்போக்குவாதம் தான் அன்று தமிழர்களை தனிநாடு கோரும் நிலைக்குத் தள்ளிச் சென்றது.

இப்போது இந்தக் கடும்போக்குவாதமும் அதை நடைமுறைப்படுத்தக் கையாளப்படும் வழிமுறைகளும் தான்தமிழர்களிட் மட்டுமன்றி முஸ்லிம்களிடமுட் அச்த்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் தான் போர் முடிந்த பின்னரும் கூட இன் மத நல்லிணக்கம் என்பது சவாலுக்குரிய விடயமாகவே உள்ளது.

அதேவேளை இலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம் தீவிரவாதம் என்பது அச்சுறுத்தலுக்குரிய விடயமாக இல்லையென்ற போதிலும் அது அச்சுறுத்தலாக உருவெடுத்து விடுமொ என்ற கவலை அரசாங்கத்துக்கு உள்ளது.

ஏனென்றால் இலங்கையுடன் நெருங்கிய நட்புறவைப் பேணும் பாகிஸ்தானும், ஈரானும் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களுக்கு ஊக்கமளிக்கும் நாடுகளாகப் பொதுவாக குற்றம் சாட்டப்படுகின்றவை.

ஈரானை இவ்வாறு அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது, பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டுகிறது.

இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குலைக்கும் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் ஊக்கமளிக்கிறது என்பது இரகசியமான விடயமல்ல.

இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு நிழல் யுத்தமே நடந்து வருகிறது.

இந்தியாவில் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானில் தீவிரவாதக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அவர்கள் இலங்கை வழியாக தமிழநாட்டின் மீது தாக்குதல் நடத்தலாம் என்றும் அண்மையில் வெளியான இந்திய உளவுத்துறை எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அத்தகைய எந்த தீவிரவாதக் குழுக்களும் இலங்கையில் இல்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மறுத்திருந்தாலும் இந்தியா அதனை முழுமையாக நம்பவில்லை.

அவ்வாறானதொரு தாக்குதல் அல்லது தாக்குதல் முயற்சி நடந்தால்கூட கொழும்பின் மீது தான் இந்தியா கடும்போக்கை வெிப்படுத்தும்.

பாகிஸ்தானுடன் இணைந்து இலங்கையும் தனக்கெதிராகச் சதிசெய்கிறதா என்றே இந்தியா சந்தேகிக்கும்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் என்று முரண்பட்ட நாடுகளுடன் நெருக்கமான உறவைப் பேண முனையும் இலங்கைக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் அதனைக் கெடுத்து விடுவார்களோ என்ற பயம் இருப்பதை மறுக்க முடியாது.

செப்டம்பர் 11 தாக்குதல் எவ்வாறு உலகளாவிய ரீதியில் திருப்பத்தை ஏற்படுத்தியதோ அதுபோலவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளைப் புரட்டிப் போட்டுவிடக் கூடியதாக இருப்பதால் தான் முஸ்லிம் தீவிரவாதம் குறித்து அதிக கலக்கம் ஏற்பட்டுள்ளது.

-சுபத்ரா

TAGS: