நைஜரில் பாலைவனத்தில் தண்ணீரின்றி 87 பேர் பலி

sahara_map_lgஆப்பிரிக்க நாடான நைஜர், உலகில் உள்ள வறுமையான நாடுகளில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள் உணவு பற்றாக்குறை காரணமாக பட்டினியால் வாடி வருகின்றனர்.

வறுமையின் கொடுமை தாங்காத அவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் அகடெஸ் நகரிலிருந்து கடந்த மார்சு முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபுக பல்வேறு குழுக்களாக வாகனங்களில் இடம் பெயர்ந்துள்ளனர்.

அவ்வாறு செல்பவர்கள் உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனத்தை கடந்து செல்லவேண்டும். பல குழுக்களாக சென்ற அவர்கள் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த சஹாரா பாலைவனத்தில் சிக்கிக்கொண்டனர். வாகனங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவர்கள் பாலைவனத்தில் கால்நடையாக சென்றுள்ளனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு பல நாட்கள் கடந்து சென்றதால், உடலில் தண்ணீர் வற்றி பெண்கள் குழந்தைகள் என அவர்கள் உயிருக்கு போராடியுள்ளனர். அவர்களுக்கு உதவ பாலைவனத்தில் யாரும் இல்லாத காரணத்தால் ஆங்காங்கே நிறைய பேர் இறந்துள்ளனர். அவர்களில் 7 ஆண்கள், 32 பெண்கள், 48 குழந்தைகளின் உடல்கள் அழுகிய நிலையில் தனித்தனியாகவும், தாயும் குழந்தையுமாக கிடந்த கொடுமையை தற்போது அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய, அல்ஜீரியா நாட்டு எல்லைக்கு அருகில் வெறும் 3 கி.மீ. தூரத்திலேயே இறந்து கிடந்துள்ளனர். கடந்த திங்களன்று இதுபோன்று 30-க்கும் மேற்பட்டோர் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. வறுமை காரணமாக மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அல்ஜீரியா அல்லது லிபியா நாட்டு கடற்கரையை நோக்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.