அமெரிக்க இராணுவ கொடூரங்களுக்கு துணைபோன மருத்துவர்கள்

guantanamo_bayஅமெரிக்க இராணுவத்தின் கட்டளைகளை ஏற்று பணியாற்றுகின்ற மருத்துவ நிபுணர்கள், பயங்கரவாத சந்தேகநபர்களை கொடூரமாகவும் இழிவாகவும் நடத்தியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

தேசிய பாதுகாப்பின் பேரில், மருத்துவ ஒழுக்கநெறிகளை மீறிச் செயற்படுமாறு அமெரிக்க இராணுவத்தினரும் புலனாய்வு நிறுவனங்களும் மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நீருக்குள் மூழ்கும் உணர்வை ஏற்படுத்தி மூச்சித்திணறச் செய்து சந்தேகநபர்களை சித்திரவதை செய்யும் வாட்டர்போடிங் போன்ற விசாரணை முறைகள் சட்டரீதியாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவப் பணியாளர்கள் இன்னும் அவ்வாறான மோசமான கொடூரங்களை புரியுமாறு பணிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

தடுப்புக்காவல் கைதிகளை கட்டாயப்படுத்தி, அவர்களின் விருப்பத்துக்கு மாறாக உணவை திணிக்கும் துன்புறுத்தல்கள் குவாந்தனாமோ பே போன்ற பல சிறைக்கூடங்களில் இன்னும் தொடர்வதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இராணுவ, சுகாதார, ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சட்டத்துறை சார்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய சுயாதீன குழுவொன்றினாலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களிலுள்ள ஆவணங்களை இரண்டு ஆண்டுகளாக ஆய்வுசெய்து வந்ததன் முடிவில் அந்தக் குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் முழுவதுமாக அபத்தமானவை என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை பேச்சாளர் ஒருவர் கூறினார். -BBC