குண்டுப் பயணிகளால் தொல்லை! எடைக்கு ஏற்ப விமான கட்டணம்

fat_people_001பயணிகளின் எடைக்கு ஏற்ப விமான கட்டணத்தை வசூலிப்பது குறித்து பல்வேறு நாட்டு விமான நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.

உலகிலேயே முதல்முறையாக கடந்தாண்டு இறுதியில் இத்திட்டத்தை சமோவா ஏர் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

அப்போது இது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த கட்டண முறை வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும், இந்த முறையில் பிற விமான நிறுவனங்களின் கட்டணத்தை விட சற்று குறைவான கட்டணத்தைத்தான் பல பயணிகள் செலுத்தி வருகின்றனர் என்றும் அந்த விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக எடையுள்ள பயணிகள் விமானத்தில் பயணிக்கும் போது, அவர்களுக்கு ஒதுக்கப்படும் இருக்கையில் அமரமுடிவதில்லை.

இதனால் அவர்களுக்கு இரு இருக்கைகளை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சினையைத் தீர்க்க பயணிகளுக்கு அவர்களின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சமோவா ஏர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கிறிஸ் லாங்டன் கூறுகையில், பொதுவாக சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் விமான நிறுவனங்களுக்கு இணையாகவே எங்கள் எடைக் கட்டணம் உள்ளது. 120 கிலோ எடை மற்றும் அதற்கு குறைவானவர்களுக்கு கட்டணம் அதிகமாக இருக்காது.

இதைவிட அதிக எடையுள்ளவர்கள் அமர கூடுதல் இடம் தேவைப்படுவதால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எங்கள் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பல்வேறு விமான நிறுவனங்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

உலகிலேயே சமோவாவில்தான் உடல்பருமனான நபர்கள் அதிகம் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.