தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ள முஸ்லிம்கள்

central_africa_001மத்திய ஆப்ரிக்க குடியரசில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் 700 பேர் தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இராணுவ புரட்சி ஏற்பட்டதில் இருந்து வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன.

குறிப்பாக கடந்த ஒரு மாதமாக கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த மோதலில் கூட 6 முஸ்லிம் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கலவரத்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வருவோருக்கு, போலி நகரில் உள்ள தேவாலய நிர்வாகத்தினர் அடைக்கலம் கொடுத்துள்ளனர். அங்கு சுமார் 700 முஸ்லிம்கள் தங்கி உள்ளனர்.

இதற்கிடையே நேற்று கூடிய தேசிய இடைக்கால கவுன்சில் உறுப்பினர்கள், இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்தனர்.

இரண்டு சுற்று வாக்கெடுப்பிற்குப் பின் பங்குயியின் மேயராகப் பணிபுரிந்து வரும் கேதரின் சம்பா பன்சா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கலவரங்கள் நிறைந்துள்ள மத்திய ஆப்ரிக்க குடியரசில், ஜனநாயக நெறியை நிலைநிறுத்தும் விதமாக நடைபெற்றுள்ள இந்தத் தேர்தல் ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கின்றது என ஐ.நாவின் ஒருங்கிணைந்த அமைதி பாதுகாப்பு அலுவலகம் கருத்து வெளியிட்டுள்ளது.