காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் திட்டமில்லை

america_flagகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யும் திட்டமில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சிக்கு (பி-டி.வி.) ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ஜேம்ஸ் டாப்பின்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

காஷ்மீர் விவகாரத்தில் 3ஆவது நாடு தலையிடுவதை ஏற்க முடியாது என்று இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. நேரடி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் இதுவென்றும், 3ஆவது நாட்டின் தலையிட்டால் தீர்க்கப்படக் கூடியது அல்ல என்றும் இந்தியா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. மத்தியஸ்தை ஏற்க முடியாது என இந்தியா நிராகரித்து வருவதால், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால் காஷ்மீர் விவகாரத்தில் குறிப்பிட்ட வரையறைக்குள்தான் செயல்பட முடியும்.

இந்தியாவில் நடத்தப்பட்டுவரும் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் எல்லை தாண்டிய தீவிரவாதம் ஆகியவை அந்நாட்டை கவலையடையச் செய்துள்ளன. இதற்கு பாகிஸ்தானே காரணம் என இந்தியா கருதுகிறது.

பாகிஸ்தானில் நீண்டகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்தக் கொள்கை (தீவிரவாதிகளை ஊக்குவித்தல்), தற்போது அந்த நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் புற்றுநோயாக மாறியுள்ளது. பாகிஸ்தானின் ஜனநாயகம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தீவிரவாதம் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் கைவிட வேண்டும். அதுதான் பாகிஸ்தானுக்கும், அதன் அண்டை நாடுகளின் நலனுக்கும் உகந்ததாகும்.

இதுபோல் பாகிஸ்தானின் பிற அண்டை நாடுகளும் தீவிரவாதத்தை ஒர் ஆயுதமாக பயன்படுத்துவதை கைவிட வேண்டும்.

இந்திய நாடாளுமன்றத்துக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்ததும் அந்நாட்டில் விரைவில் புதிய அரசு பதவியேற்கும்.

இதனை ஒரு வாய்ப்பாக கருதி, பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று ஜேம்ஸ் டாப்பின்ஸ் கூறினார்.