அளுத்கம வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து, யாழில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இணைந்து கவனயீர்ப்பு போராட்டம்!

yarl-poraddam7கொழும்பு அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இணைந்து யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றன.

அளுத்கம, பேருவளை பகுதிகளில் கடந்த 15ம் திகதி தொடக்கம் 3தினங்கள் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் சுமார் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 80ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், பல கோடி சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து யாழ்.மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களை இணைத்துக் கொண்டு அளுத்கம வன்முறைச் சம்பவத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றினை நடத்த தீர்மானித்திருந்தது.

இதற்கமைவாக இன்று யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 9 மணி தொடக்கம் 10.30 மணிவரையில் குறித்த போராட்டம் நடைபெற்றிருந்தது.

இதன்போது

உடைக்காதே உடைக்காதே வழிபாட்டு தலங்களை உடைக்காதே,
நேற்று தமிழின அழிப்பு இன்று முஸ்லிம்கள் அழிப்பா?
முஸ்லிம் அமைச்சர்களே! இன்னுமா அரசாங்கத்துடன் சல்லாபம்?
முஸ்லிம்களின் பெருளாதாரத்தை நசுக்காதே.
அரசே உன் நரபலிக்கு முஸ்லிம் பாலகனும் வேண்டுமா?
சிறீலங்கா இராணுவமே முஸ்லிம் பிரதேசங்களை விட்டு வெளியேறு,

போன்ற கோஷங்களை பதாகைகளாக எழுதிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் முஸ்லிம் தமிழ் இனங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டம் ஒன்றின் கீழ் ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் உரையாற்றுகையில் நான் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட அளுத்கம பகுதிக்குச் சென்று அங்கே இடம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுடன் 3 நாட்கள் தங்கியிருந்தேன்.

அப்போது என்னை நோக்கி ஓடி வந்த முஸ்லிம் தாய் ஒருவர் என் கழுத்தைப் பிடித்துக் கொண்டு பிரபாகரன் எங்கே? அவர் இருந்திருந்தால் நாங்கள் இன்றைக்கு இந்த நிலையில் இருந்திருக்க மாட்டோமே? அவர் எங்கே என என்னைக் கேட்டது என்னை மிக உருக்கியது.

தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிய அந்த உணர்ச்சிப் பெருக்கு மிக்க போராட்ட உணர்வு எவ்வாறு முஸ்லிம் மக்களையும் காவாந்து பண்ணியிருக்கின்றது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் என கூறினார்.

TAGS: