ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டும்: இந்தியா, பிரேசில் வலியுறுத்தல்

  • பிரேசில் அதிபர் மாளிகையில் பிரதமர் மோடியை வரவேற்கும் அந்நாட்டு அதிபர் தில்மா ரூசெஃப்.
    பிரேசில் அதிபர் மாளிகையில் பிரதமர் மோடியை வரவேற்கும் அந்நாட்டு அதிபர் தில்மா ரூசெஃப்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைப்பது உள்ளிட்ட ஐ.நா. சபை சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃபும் கூட்டாக வலியுறுத்தினர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று இந்த இரு நாடுகளும் கோரி வரும் சூழ்நிலையில், இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃபை புதன்கிழமை சந்தித்து இரு நாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம்:

பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க இரு நாட்டுத் தலைவர்களும் முடிவு செய்தனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தினர்.

ஜி 20 போன்ற சர்வதேச அமைப்புகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. வேளாண்துறை, பால் உற்பத்தி, மாற்று எரிசக்தி, விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு, இணையதள பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

3 முக்கிய ஒப்பந்தங்கள்: இந்தச் சந்திப்பின் போது இந்தியா – பிரேசில் இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இவற்றில், இந்திய செயற்கை கோள்களில் இருந்து வரும் தகவல்களை சேகரிக்க பிரேசிலில் தரைக் கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கான ஒப்பந்தமும், சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளித் துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தமும் அடங்கும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.