இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதின் பொருத்தப்பாடு: தமிழ் சிவில் சமூக அமையம்

northern_provincial_councilதமிழர்கள் மீது நடாத்தப்பட்ட, தொடர்ந்தும் நடாத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக, வட மாகாண சபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து தமிழ் சிவில் சமூக அமையம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

தேவைப்பட்ட விடத்து சர்வதேச சட்டம் தொடர்பில் கருத்துக்கூறவல்ல சட்டத்தரணிகளின் ஆலோசனையும் இவ்வறிக்கையை வெளியிடும் பொருட்டு எம்மால் பெறப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ள அவ்வறிக்கையில்,

1) ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை தொடர்பான 1948ஆம் ஆண்டு சமவாயம் இனப் படுகொலையைத் தடுப்பதையும், இனப் படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதையும் இலக்காக கொண்டது.

இச்சமவாயமானது இனப் படுகொலை என்பதை ஒரு தேசிய, இன அல்லது ஒரு மத குழுமத்தை முற்றாக அல்லது பகுதியாக அழித்தல் என வரைவிலக்கணப்படுத்துகிறது. (இனப் படுகொலை சமவாயத்தின் 2ம் உறுப்புரை).மேலும் இனப் படுகொலையானது மரபுசார் சர்வதேச சட்டத்தினால் எத்தகைய சந்தர்ப்பத்திலும் மீறப்பட முடியாத ஒரு விதியாக அடையாளங் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் ஒரு தேசிய அல்லது இனம் சார் குழும வகைக்குரியவர்கள் என்பது மறுத்துரைக்கப்பட முடியாதது.

2) சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ரோம் சட்டமானது இனப்படுகொலை (உறுப்புரை- 6), போர்க்குற்றங்கள் (உறுப்புரை 8),மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் (உறுப்புரை 7)ஆகிய மூன்றையும் குற்றங்களாக வரையறுத்துள்ளது.

தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட மற்றும் தொடர்ந்து நடாத்தப்படும் கொடுமைகளை விசாரிக்கும் எந்தவொரு விசாரணையிலும் இனப்படுகொலை உட்பட மேற்குறித்த மூன்று வகையான குற்றங்களும் விசாரிக்கப்படுதல் அவசியமானதாகும்.

போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களுக்கு மேலதிகமாக, இனப்படுகொலை பற்றியும் விசாரிக்குமாறு ஐ.நாமனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணைக் குழுவினை கோரும் உரிமை தமிழர்களுக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளுக்கும் உண்டு.

இனப்படுகொலை தொடர்பிலான விசாரணையை நாம் கோருவதானது எமக்கெதிராக நடைபெற்ற சர்வதேச சட்ட மீறல்கள் எல்லாவற்றையும் அடையாளப்படுத்தி அதனை விசாரிக்கும் முனைப்பினை உறுதிப்படுத்தும். மேலும் இனப் படுகொலையை விசாரிக்கக் கோருவதானது, ஏனைய குற்றங்களான போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு ஐ.நா விசாரணைக் குழுவிற்குச் சிக்கல்களை ஏற்படுத்தாது.

மேலும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் இனப்படுகொலை பற்றிக் குறிப்பிடப்படாமையோ அல்லது இனப்படுகொலை என்ற பதத்தை உள்ளடக்காத ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 2014 மார்ச் மாத தீர்மானத்தின் உள்ளடக்க வாசகங்களோ, ஐநா விசாரணைக் குழுவானது இனப் படுகொலையை விசாரிப்பதற்குத் தடையாக இருக்கமாட்டாது.

3) தம் மீது நடத்தப்பட்ட, மற்றும் தொடர்ந்து நடாத்தப்படும் கொடூர குற்றங்கள், இனப் படுகொலை என்ற பரிமாணத்திற்குரியது என்பது குறித்த சட்ட ரீதியான கருத்துருவாக்கம் ஒன்றை செய்வதற்கு தமிழர்களும் அவர்களது பிரதிநிதிகளும் உரித்துடையவர்கள்.

அவ்வாறான சட்டரீதியான ஒரு கருத்துருவாக்கத்தை செய்வதற்கு எமக்கு போதுமான, நியாயமான அடிப்படைகள் உண்டு.

நடந்தது இனப்படுகொலை என்கிற சட்ட நிலைப்பாட்டை எடுத்தல் என்பது அடிப்படைகள் அற்ற மேம்போக்கான ஒரு முடிவு அன்று. அவ்வாறே தமிழர்களும் அவர்களது பிரதிநிதிகளும் தம்மீது கட்ட விழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை தடுத்து அதிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் பொருட்டு சர்வதேச தலையீட்டை கோருவதற்கு உரிமையுடையவர்கள்.

இத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் சர்வதேச சட்டத்தினால் மனித உரிமைகளாக அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஐ.நாவின் இனப்படுகொலை தொடர்பான சமவாயத்தின் மூலமாக இனபடுகொலையைத் தடுப்பதற்கும் அதிலிருந்து பாதுகாப்பதற்குமான சர்வதேசத்தின் கடப்பாடுகள் உருவாகின்றன. அண்மைக்காலமாக சர்வதேச சட்டத்தில் முகிழ்த்துவரும் பாதுகாப்பதற்கான கடப்பாடுஎனும் கோட்பாட்டிலும் இனப் படுகொலையைத் தடுப்பதற்கும் அதிலிருந்து பாதுகாப்பதற்குமான சர்வதேச சமூகத்தின் கடப்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தம்மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர குற்றங்களை இனப்படுகொலையின் பாற்பட்டவை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தாமே அடையாளம் காணுதல் அது தொடர்பான விசாரணையின் பக்கச்சார்பற்ற தன்மைக்கு எந்த விதத்திலும் குந்தகம் விளைவிக்காது.

எனவே,தம்மீது நிகழ்த்தப்பட்ட குற்றம், இனப்படுகொலையின் பாற்பட்டது என தமிழர்கள் அடையாளம் காணுமிடத்து, அது எவ்வகையிலும் ஐ.நா விசாரணைகளைப் பாதிக்காது.

4) மேலும், ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதித்துவ சபைகள் இனப்படுகொலை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியமைக்கு உதாரணங்கள் உண்டு.

அவற்றுள் சில:

அ) வடக்கு ஈராக்கில் ஐளுஐளு அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இனப்படுகொலையின் பாற்பட்டவை என ஈராக்கிய பாராளுமன்றம் 2014 ஓகஸ்ட் இல் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

ஆ) காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இனப்படுகொலையின் பாற்பட்டது என பாகிஸ்தான் பாராளுமன்றம் 2014 ஓகஸ்ட் இல் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

இ) காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இனப்படுகொலையின் பாற்பட்டது என பலஸ்தீன ஜனாதிபதி முகமட் அபாஸ் அவர்கள் 2014 செப்ரெம்பர் ஐநா பொதுச் சபையில் ஆற்றிய உரையில் பதிவு செய்து இருந்தார்.

ஐ.நா மனித உரிமை பேரவையால் இரு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களை விசாரிப்பதற்காக ஓர் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்த வேளையிலேயே பலஸ்தீன ஜனாதிபதி ஐ.நா பொதுச் சபையில் இக்கருத்தை வெளிப்படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஈ) சென்ற நூற்றாண்டின் ஆர்மீனிய இனப்படுகொலை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் உட்பட உலகின் பல்வேறு பாராளுமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

5. தமிழர்களின் நலன்களை முதன்மையாகக் கொண்டு தமிழர்களும் அவர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தம்முடைய நிலைப்பாடுகளை தெளிவாக முன்வைக்க வேண்டும்.

தமது பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென்பதற்காக அப்பிரச்சினைகள் சார்ந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் உரையாடல்களை தாமே முன்னெடுப்பதற்கும் அவற்றில் பங்குகொள்வதற்குமான தார்மீக உரிமை தமிழர்களுக்கு உள்ளது. எனவே,

அ) தமிழர்கள் மீது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மேற்கொள்ளப்படுவது இனப்படுகொலையே என்பதை வெளிப்படுத்தும்

ஆ) இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரும்

இ) இனப்படுகொலையிலிருந்து தமிழர்களை பாதுகாக்க சர்வதேச தலையீட்டை கோரும்.

தீர்மானமொன்றை வடமாகாண சபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ சட்டரீதியிலோ எவ்வித தடைகளும் இல்லை என நாம் கருதுகிறோம்.

தமிழ் சிவில் சமூக அமையம்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS: