ஜனாதிபதி தேர்தலில் இனவாதத்தை கிளற துடிக்கும் பெரும்பான்மையும், தவிர்க்கும் சிறுபான்மையும்!

vanni01ஜனாதிபதி தேர்தல் புயல் இலங்கையை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விட்ட நிலையில் பொது மக்களும் இப்பொழுது எங்கும் இதே பேச்சுடன் தங்களின் கடமைகளை செய்யும் நிலையை இப்பொழுது நாம் பார்க்க கூடியதாக இருக்கின்றது.

இந்த நிலையில் அரசியல் வியாபாரிகளோ இந்தப் பக்கமா?  அந்தப் பக்கமா? அதிக இலாபத்தை பெறலாம் என்ற சிந்தனையுடன் தங்களின் அரசியல் வியாபாரத்தின் பேரங்களை பேசிக் கொண்டு வருகின்ற இன்றைய சூழ்நிலையில் ஏற்கனவே முடிவை தெரிவித்தவர்கள் தடுமாற்றத்திலும் அதேநேரம் தீர்மானித்து விட்டோம் அதிலும் எரிகின்ற வீட்டில் எடுத்தது ஆதாயம் என்ற நிலையில் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் சிங்கள அடிப்படை இனவாத அரசியல் களமோ தயாரான நிலையில் விடுதலைப் புலிகளின் கடந்த கால செயற்பாடுகளின் விபரங்களை எல்லாம் தாங்கள் பார்த்து அனுபவித்தது போல் போலி நாடகத்தை யார் யார் எப்படி பேச வேண்டுமோ அப்படி எல்லாம் சென்று அடிமட்ட சிங்கள மக்களிடையே உணர்ச்சி வசப்படும் வசனங்களை அள்ளி கொட்டுகின்றது.

அதற்கு ஆதரவாக சிங்கள அடிப்படை இனவாத ஊடகங்களும் தங்களின் விற்பனையை அதிகரித்துக் கொள்ளவும் இந்த சிங்கள அடிப்படைவாதிகளின் ஆதரவுடன் இலாபம் பெறவும் தினமும் நடந்ததாக கூறும் சிறு சம்பவங்களைக் கூட பெரிதுபடுத்திக் கொண்டு இருக்கின்றது.

இதேவேளை பழைய கதையை புதிது புதிதாக எத்தனை முறை இந்த சிங்கள அடிப்படைவாதிகளால் கூறிக்கொண்டிருக்க முடியும்? ஆகவே அவர்களுக்கு இப்பொழுது தேவை புதிய விடயம் புதிய செய்தி இதை வைத்து இந்த தேர்தலில் எவ்வாறு இலாபம் பெறலாம் என்பதே இப்பொழுது அவர்களுக்கு இருக்கும் ஆதங்கமாகும்.

சற்றும் எதிர்பார்க்க முடியாத திருப்பு முனையாக ஒரே கட்சியின் இருவர் முக்கிய பதவி வகித்த இருவர் ஜனாதிபதி வேட்பாளர்களாக களம் இறங்கியது இந்த இருவரும் ஒரே கொள்கை நோக்கம், சிந்தனை, செயற்பாடுகள் என்று இருந்து திடீரென யாரும் எதிர்பார்க்க முடியாத வேளை இரு துருவங்களாக நேருக்கு நேர் போட்டியிட முன்வந்தது.

இது ஒரு திருப்புமுனையாக இருக்கின்ற போதும். இந்த இரு முக்கிய வேட்பாளர்களும் மிக சிறந்த முறையில் தங்களின் தேர்தல் தந்திரங்களை பயன்படுத்துகின்றார்கள்.

இந்த நாட்டின் மிக முக்கிய பிரச்சினையான சிறுபான்மை மக்களின் பிரச்சினையை இருவரும் மறந்து சிங்கள மக்களின் நல்வாழ்வு, வளம், முன்னேற்றம் போன்ற பிரச்சினைகளில் மாத்திரமே தங்களின் முழு கவனமும், பிரச்சாரமும் கொண்டு செல்ல எத்தனிப்பதையும் அதையே ஏனைய அவர்களின் ஆதரவான தலைமைகளும் எடுத்து செல்வதையும் பார்க்கும் போது இந்த நாட்டில் சிறுபான்மை தமிழினம் ஒன்று இருக்கின்றது என்பதை சர்வதேசத்திற்கு மறைக்கும் ஒரு சம்பவமாகவே இருப்பதை அவதானிக்கலாம்.

இது எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இங்கு இருக்கின்றார்கள்? இருந்தார்கள் என்பதை மழுங்கடிக்கும் முதல் படியாக கருதலாம், ஏனென்றால் கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களில் சிறுபான்மையினரின் பிரச்சினையும் ஒரு முக்கிய பிரச்சினையாக மேடைகளில் பேசப்பட்டது.

ஆனால் இந்த முறை தேர்தலில் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கண்டு விட்டது போன்று ஒரு மாயையை இந்த இருவருமே மேற்கொண்டு வருவதை போல் எண்ணத் தோன்றுகின்றது. இவ்வாறு என்னும் போது தற்போதைய ஜனாதிபதி மகிந்த அவர்கள் பல மேடைகளில் கூறிய,  இந்த நாட்டில் சிறுபான்மை என்ற இனம் இல்லை” என்ற கருத்திற்கு உள் அர்த்தம் என்ன என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஜனாதிபதி தேர்தல் சம்பந்தப்பட்ட கூட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகள் வெளிவந்த போதும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, காணி, உரிமை, நீதி அமுலாக்கத்தில் உள்ள பாகுபாடுகள் வன்முறை சம்பவங்கள் போன்ற பல பிரச்சினைகளுக்கு எந்தவிதமான கருத்துக்கள் வெளிவரவில்லை என்பது முக்கியமாகும்.

அதேவேளை மலையக அரசியல் தலைமைகளை பொறுத்தவரை ஏகமனதாக மகிந்தவிற்கு ஆதரவு என்று கூறி அவர்களின் பதவிகளையும், பணம் பெற்றுக்கொள்வதையும் முடித்துக் கொண்டார்கள் என கருதலாம்.

இந்த தேர்தலில் மலையக தமிழ் மக்கள் யாருக்கு வாக்களித்தாலும் முடிவுகள் வெளிவரும் பொழுது நிச்சயம் பாதிக்கப்படுபவர்களே, .ஆனால் எந்த பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது தான் கேள்விக்குறியாகும்.

அப்படி நேர்ந்தால் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிடலாம், உடனடியாக மலையக தலைமைகள் அந்தப் பகுதி பிரதி பொலிஸ் மா அதிபரை சந்தித்து பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாக செய்தி தொடரும் அத்தோடு முடிவுறும் அந்தப் பிரச்சினை.

இவ்வாறான சூழ் நிலையில் சிங்கள பௌத்த அரசியல் தலைமைகளுக்கு இப்பொழுதே தேவை தமிழ் அரசியல் தலைமைகள் யாரை ஆதரிக்கப் போகின்றது என்ற விடயம் ஏன் இவர்களுக்கு இந்த அவசரம்?

இவர்களுக்கு தேவை இதை வைத்து அரசியலை தேர்தல் நடைபெறும் காலம் வரை சிங்கள மக்கள் முன் கொண்டு சென்று அதன் மூலம் தங்களது பதவி, சுக போகங்களை தொடர்ந்து செல்ல, அதே பாணிதான் மலையக தமிழ் தலைமைகளுக்கும்.

ஆனால் இந்த இரு முக்கிய வேட்பாளர்களுக்கு இல்லாத அக்கறை ,ஆர்வம்,சிறுபான்மை மக்களின் வாக்கை பெறுவதற்கான வழிமுறைகள், அவர்களுக்காக கூலிக்கு வேலை செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஏற்படக் காரணம் சற்று சிந்திப்போம்.

வாக்குரிமை ஜனநாயக முறையில் அத்திவாரம் இதை அவசியம் நாம் பயன்படுத்த வேண்டும். இது ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள உரிமை,அதைப்பற்றி நாம் தர்க்கம் செய்யவில்லை.

ஆனால் சிறுபான்மை மக்கள் யார் பக்கம் என்பதை தெரிந்து கொள்ள துடிக்கும் இந்த அடிப்படை சிங்கள பௌத்த அரசியல்வாதிகள் இந்த சிறுபான்மையினரின் பிரச்சினைகள் சம்பந்தமாக மௌனம் காப்பதும் அதேவேளை அவர்களின் தலைமைகள் யாரை ஆதரிக்க போகின்றது என கேள்வி கேட்க என்ன உரிமை உண்டு.

இவர்களுக்கு இந்த சூழ்நிலையில் இந்த கட்டுரை எழுதும் வரை சிறுபான்மை முக்கிய தலைமைகள் சாதிக்கும் மௌனம் இராஜதந்திரமான உண்மையான அரசியலாக நாம் கருதலாம்.

முஸ்லிம் தலைமைகள் கூட அரச சுக போகங்களை அனுபவித்து வருகின்ற இந்த வேளை வரை தீர்க்கமான தீர்மானத்தை எடுப்பதை ஒத்தி வைத்துக்கொண்டு செல்லும் போது நாம் ஏன் உடன் அறிவிக்க வேண்டும்.

இதன் மூலம் இன வாதத்தை தோற்றுவித்து பலனடைய நினைக்கும் குறுகிய அரசியல் இலாபத்தை பெற்று அனுபவிக்கும் இந்த நாட்டின் உண்மையான துரோகிகளின் முகத்திரை கிழிக்கப்படும் வரை நாமும் மௌனம் காப்போம்.

அதன் மூலம் இந்த நாட்டில் சகல பகுதிகளிலும் வாழும் நமது இனத்தை காப்போம் என்ற பெருந் தன்மையை நமது சிறுபான்மை தமிழ் தலைமைகளின் இப்போதைய நிலை சரியாகவே இன்றுவரை தெரிகின்றது.

மகா – [email protected]

-http://www.tamilwin.com

TAGS: