ரன்வேயில் சென்றுகொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் வெடிச்சத்தம்: அலறித்துடித்த பயணிகள்

airasiaசுரபயா, ஜன.5- இந்தோனேசியாவின் சுரபயாவில் உள்ள ஜூவாண்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாண்டுங் நோக்கி ஏர் ஏசியா விமானம் ஒன்று புறப்பட்டது. 120 பயணிகளுடன் விமானம் ரன்வேயில் சென்றுகொண்டிருந்த போது திடீரென வெடிச்சத்தம் கேட்டதுடன் அதன் என்ஜினும் பழுதாகி நின்றது.

இதனால் பயணிகள் அனைவரும் பயத்தில் அலறித்துடித்தனர். உடனே விமானத்தை நிறுத்திய விமானி, என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் விமானம் பறக்காது என அறிவித்தார். இதையடுத்து பயணிகள் அனைவரும் பெரும் பதட்டத்துடன் விமானத்தை விட்டு தங்களை கீழே இறக்குமாறு கூறினர். தொடர்ந்து பாதுகாப்பாக அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

எனினும் என்ஜினில் ஏற்பட்ட பழுது விரைவில் சரி செய்யப்பட்டதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தில் பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. ஆனால் பயத்துடன் இருந்த பயணிகளில் 90 சதவிகிதம் பேர் விமானத்தில் பயணிக்க மறுத்துவிட்டனர்.

அண்மையில் ஜாவா பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தால் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் ஏர் ஏசியா நிறுவனத்திற்கு இந்த சம்பவம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

-http://www.maalaimalar.com