இந்திய மீனவர்களின் இழுவை மீன்பிடியை நிறுத்தும் பிரதமரின் தீர்மானம் வரவேற்கத்தக்கது! – டக்ளஸ் தேவானந்தா

douglas devanandhaஇந்திய மீனவர்களின் அத்துமீறியதும் எல்லைதாண்டியதுமான இழுவைப்படகுத் தொழில்முறையை வடபகுதியில் முற்றாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளமையை எமது கடற்றொழிலாளர்கள் சார்பில் வரவேற்பதாக ஈழ மக்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் ஏனைய மாவட்டங்களை விடவும் வடபகுதிக் கடற்றொழிலாளர்கள் சுனாமி அனர்த்தம் மற்றும் நீண்டகால யுத்தம் என்பவற்றால் அதிக இழப்புகளையும் பாதிப்புகளையும் சந்தித்துள்ளனர்.

தற்போதைய அமைதிச் சூழலில் எமது மக்கள் முழுமையாக இல்லாது விட்டாலும் ஓரளவுக்கேனும் இயல்பு வாழ்விற்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

முன்னைய அரசுடனான எமது இணக்க அரசியல் ஊடாக வடபகுதியில் கடற்படையினரால் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கடல் வலயத் தடைச்சட்டங்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இந்திய மீனவர்களின் அத்துமீறியதும் எல்லைதாண்டியதுமான தொழில் நடவடிக்கைகளால் எமது கடல் வளங்கள் அழிக்கப்படும் அதேவேளை எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளன.

தடை செய்யப்பட்டதான தொழில்முறைகளை நிறுத்துமாறு கோரி தொடர்ச்சியாகப் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அவற்றையும் தாண்டி இந்திய மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள் தொடர்வதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்திய மீனவர்களின் இழுவை மீன்பிடித் தொழிலை முற்றாக நிறுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் தென் பகுதியிலிருந்து வருகின்ற மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள பிரதமரின் இக்கூற்று நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் எமது கடற்றொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை இயல்பாக முன்னெடுக்க முடியும் என்பதுடன் இதன்மூலம் அவர்களது வாழ்வாதாரமும் பொருளாதாரமும் முன்னேற்றம் காணுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் மட்டுமன்றி வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற 28 வகையான பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்குத் தெரியப்படுத்தியுள்ள நிலையில் அவை தொடர்பிலும் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilcnnlk.com

TAGS: