சிங்களத் தலைவர்களிடம் நாம் நிறைய கற்கவேண்டும்!

maith1-100x80சிங்களத் தலைவர்கள், தமிழ்த் தலைவர்கள் என்ற ஒரு ஒப்புநோக்குகையில் சிங்களத் தலைவர்களின் இராஜதந்திரங்கள் அவர்களின் அரசியல் பணிகள் அனைத்தும் தமது இனம், தமது மதம், தமது நாடு என்ற அடிப்படையில் இருப்பதைக் காணமுடியும்.

ஆனால் தமிழ்த் தலைவர்களை நோக்கும் போது இவர்கள் தமது இனம், தமது மக்கள், தமது தாயகம் என்ற உணர்வுகளுக்கு அப்பால் தமது அரசியல் கட்சி, தமது அரசியல் இலாபம் என்பவற்றுக்கே முன்னுரிமை கொடுத்து வந்துள்ளனர், கொடுத்து வருகின்றனர்.

தமிழ்த் தலைமையிடம் இருந்த இத்தகையதொரு பலவீனத்தை சிங்களத் தலைவர்கள் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனாலேயே தமிழ் மக்கள் இன்று வரை துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இத்தகையதொரு நிலைமைக்கு சமாந்தரபலம் கொண்ட இரு பெரும் அரசியல் கட்சிகளுக்கான களத்தை தமிழ் மக்கள் உருவாக்கத் தவறியமையாகும்.

அதாவது கீரைக் கடைக்கும் எதிர்க்கடை தேவை என்பதை அரசியல் கட்சி விடயத்தில் தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் ஒரு கட்சி மட்டுமே பலம் பெற்ற கட்சியாகிப் போனது. இத்தகையதொரு நிலைமை தந்தை செல்வநாயகம், தளபதி அமிர்தலிங்கம் போன்ற உன்னதமான தமிழ்ப் பற்றாளர்கள் இருந்த போது பிரச்சினையாகத் தெரியவில்லை.

அவர்கள் எது செய்தாலும் அது தமிழ் மக்களுக்கானதாகவே இருந்தது. ஆனால் இன்றைய நிலைமை அது அன்று. தமிழர்களின் அரசியல் கட்சி என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சியின் தலைமைக்குள் பலரும் புகுந்து விட்டனர். இதனால் யார் எந்தப் பக்கம் என்பதை புரிய முடியாமல் தமிழ் மக்கள் தத்தளிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கட்சிக்குள் இருக்கக் கூடியவர்களில் பலர் தமது அரசியல் இலாபம் பற்றியே சிந்திக்கின்றனர். ஆனால் சிங்களத் தலைவர்களின் நிலைமை அது அன்று.

விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர் சர்வாதிகாரப் போக்கில் நடந்த மகிந்த ராஜபக்­சவின் ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கூட்டாக முடிவெடுத்தனர்.

இதற்காக அவர்கள் சர்வதேச நாடுகளின் உதவியையும் தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டனர். சிறுபான்மைத் தமிழ் இனத்தின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் அதே சிறுபான்மைத் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக இருப்பதை காணமுடியும்.

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானால், பிரதமராகினால் அது பற்றி சிங்கள மக்கள் எதுவும் கூறமாட்டார்கள். ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் அது குறித்து சிங்கள மக்கள் குழப்பம் அடைவார்கள் என்று கூறுவது எந்தளவுக்கு நியாயமானது என்பதை தமிழ் அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆனால், அவர்கள் அது பற்றி இம்மியும் உணரமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு தமிழ் மக்களின் நலன் பற்றி எந்தக் கவனமும் கிடையாது.

அவ்வாறானதொரு கவனம் இருந்திருக்குமாயின் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் போது தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை தமிழ்த் தலைவர்கள் முன்வைத்திருப்பர்.

அவ்வாறானதொரு நிபந்தனை முன்வைக்கப்பட்டிருக்குமாயின் மைத்திரி ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற கையோடு, சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சல் கொடுத்த அன்றே தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருக்க முடியும்.

என்ன செய்வது? எங்கள் தலைவிதி இது. ஆயினும் தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்களத் தலைவர்களிடம் நிறையவே கற்றுக்கொண்டு தங்கள் அரசியல் பாதைகளை புதுப்பிக்க வேண்டும்.

-http://www.puthinamnews.com

TAGS: