எனது மகள் உயிருடனே இருக்கின்றாள்: ஆணைக்குழு முன் தந்தையொருவர் சாட்சியம்

investigat-001தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டாய ஆட்சேர்ப்பின் ஊடாக இணைத்துக் கொள்ளப்பட்ட பலர் போர் நிறைவடைந்த பின்னர் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த பின்னர் காணாமல்போயினர்.

மேலும் அவர்கள் தொடர்பில் அவர்களுடைய உறவினர்களிடம் போருக்குப் பின்னர் விசாரணைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டிருக்கின்றன.

காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்றைய தினம் பருத்தித்துறை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்தபோது வழங்கப்பட்ட சாட்சிகளிலேயே இந்த விடயம் சுட்டப்பட்டிருக்கின்றது.

குறித்த விடயம் தொடர்பில் வழங்கப்பட்ட சாட்சிகள் இவ்வாறு அமைந்திருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

எஸ்.தனபாலசிங்கம் என்பவர் தனது மகள் த.கெங்காமாரி (வயது17) தொடர்பாக சாட்சியம் வழங்குகையில்,

2009.04.04 ம் திகதி எனது மகள் மாத்தளன் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளின் காவல்துறையினர் கட்டாய ஆட்சேர்ப்பின் ஊடாக எனது மகளை பிடித்தனர்.

இதன் பின்னர் எமக்கு எந்தவிதமான தகவல்களும் கிடைக்காத நிலையில் போர் நிறைவடைந்து நாங்கள் வவுனியா முகாம்களுக்கு வந்த நிலையில் மற்றொரு முகாமில் எனது மகளை பார்த்ததாக மற்றொரு பெண்பிள்ளை எமக்கு கூறினார்.

அவர் எனது மகளின் பெயர் மற்றும் அங்க அடையாளங்கள் உள்ளிட்ட சகல விடயங்களையும் மிகவும் சரியாக கூறியிருக்கின்றார். அந்தவகையில்
எனது மகள் உயிருடன் இருக்கவேண்டும்.

தங்கவடிவேலு என்பவர் தனது மகள் தொடர்பில் சாட்சியம் வழங்கும்போது,

2009.01.04ம் திகதி எனது மகள் கஜானி (வயது18) விடுதலைப் புலிகள் தர்மபுரம் பகுதியில் வைத்து கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்துக் கொண்டனர். பின்னர் எனது மகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் எனது மகள் போர் நடைபெற்ற பகுதியில் படையினரிடம் சரணடைந்ததாக மகளுடன் நின்றவர்கள் எமக்கு கூறியிருக்கின்றார்கள்.

மேலும் போருக்குப் பின்னர் 4ம் மாடிக்கும், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கும் அழைத்து என்னை விசாரித்தார்கள். எனவே எனது மகள் உயிருடன் இருக்கின்றாள் என தமது சாட்சியத்தில் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

TAGS: