காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு உதவித்திட்டம் வழங்குவதாக கூறி திசை திருப்ப முயற்சி: செல்வம் எம்.பி விசனம்

selvam_mp_001யாழ் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜானதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகள், காணாமல் போன உறவினர்களுக்கு உதவித்திட்டங்களை வழங்குவதாக தெரிவிக்கும் கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

காணாமல் போனவர்களை கண்டறியும் ஜானதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வருகின்ற போதும் காணாமல் போன தமது உறவுகள் எப்படியாவது கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் சாட்சியமளித்து வருகின்றனர்.

எனினும் அவர்களின் நம்பிக்கைக்கு எதிரான விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் காணாமல் போனவர்களுக்கான மரணச்சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறும் அதனை தொடர்ந்து வீட்டுத்திட்டம், சமூர்த்தி, கோழி வளர்ப்பு போன்ற உதவிகளை பெற்றுத்தருவதாக அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கருத்துக்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

காணாமல் போன, கடத்தப்பட்டவர்களின் நிலை குறித்து அவர்களின் உறவினர்கள் உண்மையான நிலைப்பாடுகளை சாட்சியமளித்து வருகின்றனர்.

சாட்சியாளர்களை குழப்பும் வகையில் விசாரணைனைகள் மேற்கொண்டு வரும் அதிகாரிகள் உதவித்திட்டங்களை வழங்குவதாக கூறுவதை காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

எனவே காணாமல் போன,கடத்தப்பட்டவர்களின் தற்போதைய நிலை என்ன? அவர்கள் எங்கிருக்கின்றார்கள்? அவர்களின் மீட்பு ஆகியனவையே தற்போது அந்த உறவுகளுக்கு தேவை.

அதற்கு மாறாக அவர்கள் எவ்வித உதவித்திட்டங்களையும் அரசாங்கத்திடம் கேட்கவில்லை.

எனவே காணாமல் போனவர்களை கண்டறியும் ஜானதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது மக்களின் சாட்சிங்களுக்கு எதிராக அவர்களை குழப்பும் வகையில், விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் நடந்து கொள்ளக்கூடாது.

தொடர்ந்தும் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை, விசாரணை என அந்த மக்களை துன்பப்படுத்தும் செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றதே தவிர அந்த மக்களுக்கு இது வரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை.

எனவே காணாமல் போனவர்களின் உறவினர்கள் மரணச்சான்றிதழை பெற்றுக்கொண்டால் உதவித்திட்டம் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறுவதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: