போர்க்குற்ற விசாரணையில் அரசு ஆர்வம் காட்டவில்லை! ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் அதிருப்தி

Un Main 01போர்க் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை விவகாரங்களைக் கையாளுவது நல்லதொரு சமிக்கையாகத் தென்படுகின்றபோதிலும், புதிய அரசு இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை

என்று ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நீதிக்குப் புறம்பான, எதேச்சதிகார அல்லது பலவந்தமான படுகொலைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரான கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் இது குறித்து கருத்து வெளியிடுகையில்,

“2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஆணையை இலங்கை நிறைவேற்றும் போது அதுவே என்னைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமான ஒரு தருணமாக இருக்கும். இலங்கையில் பெரியளவில் படுகொலைகள், வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆகவே இவை அனைத்தையும் இலங்கை அரசானது விசாரணை செய்து தீர்வு காண்பதில் ஆர்வம் காண்பிக்க வேண்டும். பல்வேறு மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கான  ஆரம்ப கட்டத்தில் தற்போது உள்ளது. இந்த நடவடிக்கைகள் எவ்வளவு தூரம், எவ்வாறு இலங்கையில் கொண்டு செல்லப்படவுள்ளது என்பதை எவரும் அறியமாட்டார்கள்.

இலங்கை தனது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றபோதிலும் புதிய அரசு முழு அளவில் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுக்கவேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் ஐ.நா. சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக இலங்கை அரசு மீது இது முற்றிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எல்லா விவகாரங்களுக்கும் பொருத்தமில்லாத ஒரு முறைமையை இலங்கை அரசு ஊக்குவிக்கிறது. பொறுப்புக்கூறல் என்பது மிகவும் முக்கியமானதாகும். பொறுப்புக்கூறல் என்பது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மையமாக உள்ளது. ஆகவே முதலில் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படவேண்டும்.

பொறுப்புக் கூறல் செயற்படுத்தப்படாதவிடத்து ஏனைய எந்தவொரு பிரச்சினைகளையும் நிறைவேற்ற முடியாது. பொறுப்பளித்தல் என்பது ஒருவரது வாழ்வுரிமைக்கு உத்தரவாதமளிக்கிறது. எவ்வாறெனினும், இலங்கை அரசு என்னை அழைத்தால் நான் நிச்சயமாக அங்கு செல்வேன்.  இதற்கு இலங்கை அரசின் அனுமதி மிகவும் முக்கியமானது . இதனைத் நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

இலங்கை சில கட்டளைகளை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால் என்னால் வழங்கப்பட்ட ஆணையை இலங்கை இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் இலங்கைக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிவதற்கு அந்த நாட்டு அரசு என்னை அழைக்க வேண்டும் என்பதே எனது விருப்பாகும். அவர்கள் என்னை அழைத்தால் நான் எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு உடனடியாக இலங்கைக்கு விரைந்து செல்வேன்” – என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: