இறுதியில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது ?

tamil_genocide_004உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் இன மொழி நிற வேறுபாடுகளின்றி தத்தம் பிராந்தியங்களில் (நாடுகளில்) உள்ள இயற்கையின் வரப்பிரசாதங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளவும் சுதந்திரமாகத் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் உரிமையும் சுதந்திரமும் உள்ளவர்கள்.

ஒருவர் தனியாகவோ அல்லது பலர் கூட்டாகவோ இன்னொருவரின் அல்லது இன்னொரு கூட்டத்தினரின் உரிமை, சுதந்திரத்தைப் பாதிக்காமல் வாழவேண்டும்.

ஒருவர் தனியாகவும் தனது வெவ்வேறு தேவைகளின் பொருட்டு வெவ்வேறு கூட்டத்தினருடன் சேர்ந்தும் தனது முயற்சிகளை முன்னெடுக்கலாம். அவரவர் வல்லமைக்கும் தகுதிக்கும் முயற்சிக்கும் ஏற்ப பயன்களை அடைவர்.

தாம் தேடிக்கொண்டவற்றை அல்லது இன்னொருவர் உவந்தளித்ததை அனுபவிக்க ஒருவருக்கு உரிமை உண்டு.

இதுதான் சர்வதேச மனித உரிமையின் அடிப்படை. இந்த அடிப்படைகள் பேணப்படும் இடங்களில், நாடுகளில் அமைதியும் சமாதானமும் உயர்வும் மகிழ்வும் நிலவும்.

அதை உறுதிப்படுத்தவே அந்தந்த நாடுகளில் அந்தந்த நாடுகளின் நிலைமைகளுக்கேற்ப அரசியல் அமைப்புகள், சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தம்:-

தமக்கான ஒரு புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முற்படும் இலங்கை மக்களும் மேற்சொன்ன அடிப்படைகளை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் முதலில் அனைத்துத் தரப்பினருக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்.

அது சாத்தியமானால் மிகுதி மிக இலகுவாகவும் விரைவாகவும் நிறைவேறிவிடும். எழுத்திலான கனவான் ஒப்பந்தமாவது அவசியம்.

இலங்கைக்கு ஏற்ற அரசியல் அமைப்பு ;-

ஒரு நாட்டில் உள்ள அனைவரும் ஒரே மதத்தையோ மொழியையோ சாராதவராயின் அந்த நாட்டில் ஒரு மதத்திற்கோ ஒரு மொழிக்கோ முன்னுருமை கொடுக்கப்பட்டால் மேற்கூறிய அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு விடும்.

இலங்கையில் குறிப்பிடக்கூடியவாறு சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் மலையகத் தமிழர் ஆகிய மக்கள் கூட்டத்தினர் வாழ்கின்றனர்.

எனவே எந்தவொரு மதத்திற்கோ மொழிக்கோ முன்னுரிமை வழங்க முடியாது. ஆனால் அனைவருமே சிங்களம் அல்லது தமிழைத் தமது தாய் மொழியாகக் கொண்டிருப்பதால் அவ்விரண்டு மொழிகளையும் வேண்டுமானால் உலகப் பொது மொழியாகிய ஆங்கிலத்தையும் அரசகரும மொழிகளாகக் கொள்ளலாம்.

பௌத்தம் இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகிய பல மதங்கள் பின்பற்றப் படுவதாலும் அரச கருமங்களில் மதம் பெருமளவில் பயன்படுவதில்லை என்பதாலும் மதச்சார்பற்ற அரசாக இருந்துகொண்டு அவரவர் மதங்களை அவரவர் பேணிப்பாதுகாக்க அரசு வேண்டியளவு உதவியாக இருக்க முடியும்.

அடுத்ததாக மேற்குறிப்பிட்ட பிரதானமான நான்கு மக்கள் கூட்டத்தினரும் ஒருகூட்டத்தினரை மற்றக் கூட்டத்தினர் நசுக்காதவாறு சம கௌரவமாக வாழக்கூடியவாறு, ஒரு கூட்டத்தினர் தலைவிதியை இன்னொரு கூட்டத்தினர் தீர்மானிக்கும் நிலைமை இல்லாதவாறு அந்த அரசியல் அமைப்பு அமைய வேண்டும்.

இலங்கை முழுவதற்கும் பொதுவான விடயங்களைக் கவனிக்க ஒரு மத்திய அரசு இருக்கலாம். அதைவிட சிங்களவரும் தமிழ் பேசும் மக்களும் வெவ்வேறு பிராந்தியங்களில் (மாநிலங்களில் ) பாரம்பரியமாக செறிவாக வாழ்வதால் அவரவர் பிராந்திய நிர்வாகத்தை அவரவர் மேற்கொள்ளக்கூடியவாறு (தமக்கான சட்டங்களை தாமே இயற்றி நடைமுறைப்படுத்தக் கூடியவாறு – காணி, காவற்துறை உட்பட ) இலங்கை அரசமைப்பு அமைய வேண்டும்.

தமிழர் பிராந்தியமான வடகிழக்கில், கிழக்கின் ஒருபகுதியில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்வதால் அப்பிரதேசம் பிராந்திய அரசின் கீழ் வரும் சில சிறப்புரிமை கொண்ட பிரதேச நிர்வாக அலகாக இருக்கலாம்.

அதேபோல் சிங்களப் பிராந்தியத்தில் மலையகத்தில் செறிவாக வாழும் மலையகத் தமிழரின் பிரதேசத்திற்கும் சில சிறப்புரிமைகளைக் கொடுக்கலாம்.

புதிய அரசியல் அமைப்பில் இவை யாவும் அடிப்படைச் சிறப்பு அம்சங்களாகக் குறிப்பிட வேண்டும்.

இந்தச் சிறப்பான அரசியல் ஏற்பாடுகளை எந்தவொரு பிராந்திய அரசோ மத்திய அரசோ எப்படிப்பட்ட பெரும்பான்மையினாலும் ஒருதலைப் பட்சமாக மாற்ற முடியாது என்று அரசமைப்பில் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

மாற்றங்கள் செய்யவேண்டுமானால் சம்மந்தப்பட்ட இருதரப்பாரதும் ஒப்புதல் தனித்தனியாக வேண்டும் என்று இருக்கவேண்டும்.

அதனால் சிங்கள மக்கள் கொடுத்த உரிமையை மீண்டும் பறித்து விடுவார்கள் என்று தமிழரும், தமிழர் தனியாகப் பிரிந்து போய் விடுவார்கள் என்று சிங்களவரும் நினைக்கும் சந்தேகத்திற்கு இடம் இல்லாது போகும்.

இப்படியான அரசியல் அமைப்பை சமஷ்டி முறையிலோ, பிராந்தியங்களின் இணைவு (மாநிலங்களின் கூட்டிணைவு) முறையிலோ ஏற்படுத்தலாம். இதன் பொருட்டு வடகிழக்கு, தெற்கு, மேற்கு, மத்தி, வடமத்தி என 5 பிரிவுகளாக இலங்கை பிரிக்கப்படலாம்.

அல்லது இங்கிலாந்தில் ஷ்கொட்லாந்திற்கு நடந்துள்ளதைப் போல் வடகிழக்கை மட்டும் பிரித்து அதற்குரிய அதிவிசேட அதிகாரங்களைக் கொடுக்கலாம்.

எப்படிக் கொடுபடுகிறது என்பதைக் கவனிக்காமல் மேலே சொல்லப்பட்ட உரிமைகள் சுதந்திரம் என்பன மீண்டும் பறிக்கப்பட முடியாதவாறு கொடுக்கப்படுவதை மட்டுமே தான் கவனிக்க வேண்டும்.

அப்படியான அரசியல் அமைப்பை ஏற்படுத்துவதில் உள்ள சவால்கள்:-

சிங்களத் தரப்பு எதிர்கொள்ளும் சவால்கள் :-

1. இலங்கையைத் தனிச் சிங்களப் பவுத்த நாடாக்க வேண்டும் என்று சிங்கள மக்கள் மத்தியில் காலம் காலமாகக் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் இனவாதச் சிந்தனை

2. தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்தால் அவர்கள் தனி நாடு அமைத்து விடுவார்கள் என்ற சிங்களவர்களின் மனப்பயம்.

3. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சேர்ந்து கல்வியிலும் பொருளாதாரத்திலும் தம்மை முந்தி விடுவார்கள் என்ற சிங்களவரின் பொறாமை.

4. சிங்கள அரசியற் தலைமைகளிடையே (கட்சிகளிடையே) இருக்கும் அதிகாரப் போட்டி.அதற்கு அவர்கள் இலகுவாகப் பயன்படுத்தும் இனவாதம்.

5. தமிழரை, அவர்களின் நிலங்களை, வளங்களை தமக்கு இலவசமாகக் கிடைத்த சொத்தாகப் பயன்படுத்தி உருசி கண்ட இலங்கை இராணுவத்தை அதிலிருந்து மீட்டெடுப்பது.

இந்தச் சவால்களை முறியடிப்பது நிட்சயமாக எளிதான காரியமல்ல. அதிஉச்ச இராஜதந்திர சிந்தனைகள் செயற்பாடுகள் அதற்கான மனோதிடம் என்பன மிக மிக அவசியம்.

சர்வதேசத்தின் உதவியோடு செயற்பாடுகளை வகுத்துக் கொண்டு இன்றுள்ள (நல்லாட்சி) அரசு அச்செயற்பாடுகளை செயற்படுத்த வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தைப் போன்று சிங்களப் பகுதிகள் எங்கும் கிராமம் கிராமமாக கொள்கை விளக்கக் கூட்டங்களை (Town hall meetings) நடத்தி சிங்கள மக்களுக்குத் தெளிவை, முற்போக்கான சிந்தனைகளை உருவாக்க வேண்டும்.

அவர்களிடம் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டிருக்கும் தவறான எண்ணங்களை அனாவசியமான மனப்பயங்களை நீக்க வேண்டும். அரசிற்குச் சார்பான மத்திய, மாகாண மற்றும் உள்ளூராட்சி அரசியல் வாதிகள், இளையோர், மகளிர் அமைப்புகள் அனைவரும் அதில் ஈடுபட வேண்டும்.

ஊடகங்களையும் இதற்காக முறையாகப் பயன்படுத்த வேண்டும். இனவாதத்தை கக்கிக்கொண்டு பிரச்சாரம் செய்யும் மகிந்த தரப்பினரை முறியடித்து வெற்றி காண வேண்டும்.

அதற்கான திடசங்கற்பம் நம்பிக்கை சிங்கள அரசியல் வாதிகளிடம் வேண்டும். அதற்கு முன்னோடியாக முதலில் அரசியல் வாதிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

ஆயுத யுத்தத்தில் வெல்வது அவ்வளவு பெரிய விடயமல்ல, இந்த அரசியல் யுத்தத்தில் வெல்வதே உண்மையான வெற்றி.

மக்களோடு சேர்ந்து இராணுவத்தினர் மத்தியிலும் சிறிது மனமாற்றம் ஏற்படலாம். அவர்களைச் சமாளிக்கப் பல செயற்பாடுகளை தந்திரோபாயங்களைக் கையாள வேண்டியது இன்றியமையாதது.

“இந்தப் புதிய அரசியல் அமைப்பால் சிங்கள மொழியும் பவுத்த மதமும் எவ்விதத்திலும் பாதிக்கப்படவே மாட்டாது.

மாறாக கடந்த பல தசாப்தங்களாக அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரம் அதிதுரித வளர்ச்சி காணவும், அநாகரிகமான அநீதியான அடக்குமுறையான ஜனநாயக விரோத குடும்பஆட்சி இனியும் ஏற்படாமல் நீதியான சட்டத்தின் நல்லாட்சி அமையவும், இலங்கை மக்கள் அனைவரும் ஒற்றுமையாக சமத்துவமாக சந்தோசமாக வாழவும், சிங்கப்பூரைப் போன்று பூமிப்பந்தில் ஒரு முன்னுதாரணமாகக் காட்டக்கூடியவாறு இலங்கையை உருமாற்றி, நாம் இலங்கையர் என்று பெருமையோடு இலங்கை மக்கள் உலகில் பிரகாசிக்கவும் இப்படியான புதிய அரசியல் அமைப்பு மிக அவசியம்” என்பதை பெரும்பாலான சிங்கள மக்கள்ஏற்றுக்கொள்ளும் வரை புதிய அரசியல் அமைப்போ இலங்கைப்பிரச்சனைக்கு (தமிழர் பிரச்னைக்கு) தீர்வோ சாத்தியமாகாது.

சிங்களத் தலைமைகள் மட்டும் விரும்பிகாரியம் நடக்காது. மக்களுக்கான பிரச்சாரங்களை மிக மிக ராஜதந்திரமாக முன்னெடுக்கும் அதேவேளை ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

இதனைச் சாதிப்பதே இன்றைய நல்லாட்சிச் சிங்களத் தலைமகளின் ராஜதந்திர அரசியலுக்கான சவாலாகும்.

இன்றைய நல்லாட்சியைப் பாதுகாக்க விரும்பும் சிங்கள மக்களோடு இந்தியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளும் தமிழர் தரப்பும் இன்றைய அரசு அதன் சவால்களை முறியடிக்கத் தேவையான அனைத்து விடயங்களிலும்
உதவியாகவும் அதேசமயம் அவர்கள் சரியான திசையில் பயணிக்கத் தவறும்போது அதி உச்ச அழுத்தங்களைப் பிரயோகிப்பவர்களாகவும் இருக்க வேண்டியது இன்றியமையாதது.

தமிழர் தரப்பு எதிர்கொள்ளும் சவால்கள் :-

சிங்களத் தரப்பாரைவிட குறைவாக இருப்பினும் தமிழர் தரப்பிலும் சவால்கள் பல உள்ளன. தமிழ் மக்கள் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு அடிமைப்பட்டு விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள்.

இன்றைய சர்வதேச முற்போக்கான அரசியல் யதார்த்தங்களையும் அதன்மூலம் உள்நாட்டிலும் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்களையும், கடந்த காலங்களில் இல்லாத ஒரு புதிய அரசியற் சூழ்நிலை, சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருப்பதையும், இந்த நேரத்தில் சிங்கள
மக்களை உசுப்பேற்றாமல் அவர்கள் கொண்டிருக்கும் மனப்பயத்தை சந்தேகத்தைப் போக்கக்கூடிய வண்ணம் தமிழர் செயற்பாடுகள் அமைய வேண்டியதன் தேவையையும் , இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனிநபர் அல்லது கட்சி நலன் பாராது ஒட்டுமொத்தத் தமிழ் பேசும் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டிய அவசியத்தையும் தமிழ் மக்களுக்குப் புரிய வைப்பது தமிழ்த் தலைமையின் சவாலாக உள்ளது.

தமிழர் தலைமையும் தமது பங்கிற்கு தமிழர் பகுதி எங்கும் பரப்புரைக் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டியது மிக அவசியம்.

சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த தரப்பாரைப்போல் தமிழர் தரப்பிலும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் பித்தலாட்டங்களையும் முறியடிக்க வேண்டியுள்ளது.

மேலும் தமிழ்பேசும் முஸ்லிம் மக்களுடன் நல்லுறவைப் பேணுவது தவிர்க்க முடியாதஒன்று என்பதால் அமையப்போகும் வடகிழக்குப் பிராந்திய அரசில் முஸ்லிம்களுக்கான சிறப்புரிமைகள் பற்றிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களுக்கிடையே ஏற்படுத்தியே ஆக வேண்டும்.

மேலும் ஊடகங்களும் வெறுமனே தமது வணிக நோக்கோடு மட்டும் நில்லாது தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து, மக்களை சும்மா உணர்சிவசப்படுத்தி உசுப்பேற்றி அவர்களின் பரந்த அரசியற் சிந்தனைகளை மழுங்கடிக்காமல் பொறுப்போடு செயற்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

ஒருவரது பதவி, அதிகாரப்போட்டிக்கு அல்லது தனிப்பட்ட பகைமைகளை சாதிப்பதற்கு இது தருணமல்ல, என்பதை உணர்ந்து இனத்தின் நன்மை கருதியாவது தமிழர் தரப்புகள் ஒற்றுமையாய் ஒரே குரலில் ஒலிப்பதே தமிழினத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் திறவுகோலாகும்.

திறமையானதோ குறையானதோ, நாம் ஏற்படுத்திய எமது தலைமையை நாமே சிதைக்க முற்படுவோமானால் எம்மினத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

நமக்குத் தேவை பலகாரம், சிலுசிலுப்பு அல்ல. அரசியலில் சிக்கல்களைத் தாண்டிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் சொற்பதங்கள், வசனங்கள், கட்டமைப்புகள் வித்தியாசமாக இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் கிடைக்க வேண்டியது எவ்விதத்திலாவது கிடைத்தால் ஏற்றுக்கொள்ளலாம், கொள்ள வேண்டும்.

ஒரு தரப்பு வெல்வது நிரந்தரமாகாது. இருதரப்பினரதும் வெற்றியே நிரந்தரமாகும்.

யதார்த்தநிலை :-

தமிழராகிய நாங்கள் எதையும் கேட்கலாம், எப்படியும் கேட்கலாம் , எவ்வளவு அழுத்தத்தையும் கொடுக்கலாம், அதி உச்ச ராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொள்ளலாம், அவையெல்லாம் நடைபெற்றும் இறுதியில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? என்பதே வானளவு கேள்வியாகும்.

திருப்தியான முடிவு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?. அப்படிக் கிடைக்காவிட்டால் ஈழத்தமிழினம் முழுவதும் தற்கொலையா செய்ய முடியும்?.

சும்மா போராடுவோம் போராடுவோம் என்று எவ்வளவு காலம், எத்தனை சந்ததியை ஏமாற்றலாம்?. அரசியல் என்பது வெறும் தொழிற்சங்கப் பிரச்சனை அல்ல.

பிரபாகரன் போராட்டத்தால் சாதிக்க முடியாததை வெறும் தெருப்போராட்டத்தால் சாதிக்க முடியுமா?. முடிந்தவரை முயற்சிப்போம். நல்லதையே எதிர்பார்ப்போம்.

அது கிடைக்கவில்லை என்றாலும் இப்போது இருப்பதைவிட முன்னேற்றமாக இருக்குமாயின் அதை இறுதித் தீர்வாக ஏற்றுக்கொள்ளாமல் இறுதித் தீர்வை நோக்கிய பயணத்தின் ஒரு கட்டமாக அதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பயணிப்பதைத் தவிர நமக்கு வேறு வழி கிடையாது.

V.Vin.Mahalingam.
[email protected]

-http://www.tamilwin.com

TAGS: