இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை! ஜனாதிபதி ஆணைக்குழு

warஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய்யென காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களால் தருஸ்மன் அறிக்கையும் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக ஆ​ணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட விசாரணைகளின் அறிக்கை நேற்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் சர்பியா மற்றும் குரேஷியா நாடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழு தமது அறிக்கையில் கூறியுள்ளது.

ஆயுதமேந்தியவர்களால் பொது மக்கள் பட்டினி போடப்பட்டதாக கூறப்படுவது மிகைப்படுத்தப்பட்டதொன்றாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், யுத்த சூனிய வலயங்களாக எந்த பிரதேசங்களும் காணப்படவில்லை என கூறியுள்ள ஆணைக்குழு, அந்த பகுதிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளும் உண்மைக்கு புறம்பானது என தனதறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

விடுதலைப்புலிகளால் யுத்த சூனிய வலயங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்ததின் போது ஏராளமான பொதுமக்கள் விடுதலை புலிகளால் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்டமையாலேயே சிவிலியன்கள் பலர் கொல்லப்பட்டதாக காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையின் விசேட நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினாலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் அந்த குழுவில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அனுமதியில்லை எனவும் அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: