பிரபா, பொட்டம்மான் குறித்து விசாரணைகளை நடத்தி உண்மையைக் கண்டறிவோம்! அரசாங்கம்

prabapottuammவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி உண்மைகளை கண்டறியும் பணிகளை மேற்கொள்வோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ச்சியாக பல கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், அரசாங்கம் இந்த விவகாரங்கள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றது என கேட்டபோது அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த காலத்தில் இருந்து ஏற்கனவே பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்போது அமைச்சர் சரத் பொன்சேகா கூறிவரும் கருத்துகள் மேலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

இறுதி யுத்தத்தின் கடைசிக் கட்டங்கள் தொடர்பிலும், பிரபாகரன், பொட்டு அம்மான், லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் தொடர்பிலும் இப்போது பல கருத்துகளை முன்வைத்துள்ளார். எவ்வாறு இருப்பினும் இந்த விவகாரங்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்மைகளை கண்டறியும் வேலையினை அரசாங்கம் மேற்கொள்ளும்.

அதேபோல் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவாகரத்திலும் எழுந்துள்ள சர்ச்சைகள், இறுதி யுத்த நேரத்தில் இராணுவத்தினர் வசம் சரணடைந்த பொதுமக்களின் நிலைமைகள் தொடர்பில் பொதுமக்கள் முன்வைத்து வரும் வாக்குமூலங்கள் தொடர்பிலும் அரசாங்கம் தீர்விரமாக ஆராய்ந்து விரைவில் உண்மைகளை கண்டறியும் .

மேலும் இந்த விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளின் மூலமாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சரத் பொன்சேகா கூறிவருகின்றார். ஆனால் இப்போதிருக்கும் நிலையில் சரவதேச விசாரணைகள் மேற்கொண்டு இந்த விடயங்களை கண்டறிய வேண்டிய அவசியம் இல்லை.

இப்போதிருக்கும் நிலையில் நாம் உள்ளக விசாரணைகள் மூலமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அதையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

கடந்த ஆட்சியில் உள்ளக விசாரணைகளின் மூலமாக எந்த தீர்வும் கிடைக்காத காரணத்தினாலேயே பல சிக்கல்கள் எழுந்தன.

அவ்வாறான நிலையில் சரவதேச தரப்பின் அழுத்தங்களில் இருந்து நாட்டையும் இராணுவத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டு சேர்ந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வுக்கான முயற்சிக்கின்றன.

இப்போது உள்ளக பொறிமுறைகள் சரியாக நடைபெற்று வருகின்றன. எவ்வாறு இருப்பினும் யுத்தத்தின் இறுதித் தருணங்கள் தொடர்பில் அரசாங்கம் தீவிரமான விசாரணைகளை மேற்கொள்ளும்.

இராணுவம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றாலும் அதில் எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை தண்டிக்கும் வகையில் விசாரணை பொறிமுறையாக அமையாது என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: