அன்வார் நல்லாவுக்கு எதிரான வழக்கில் தானே வழக்காடுவார்

anwarமுன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  மலேசிய  ஐக்கிய  இந்தியர்  கட்சித்  தலைவர்  எஸ்.நல்லகருப்பனுக்கு  எதிராக  தொடுத்துள்ள  ரிம100மில்லியன்  அவதூறு  வழக்கை  தாமே  நடத்த  முடிவு  செய்துள்ளார்.

அவ்வழக்கு  வெள்ளிக்கிழமை விசாரணைக்கு  வருவதாக  அன்வாரின்  முன்னாள்  வழக்குரைஞர்  லத்தீபா  கோயா  தெரிவித்தார்.

வழக்குரைஞருடன்  கலந்துபேச  அன்வாருக்குப்  போதுமான  நேரம்  ஒதுக்கப்படுவதில்லை  என்பதால்  வழக்கைத்  தாமே  எடுத்து  நடத்த  அன்வார்  முடிவு  செய்தார்.

வாரத்துக்கு  ஒரு  மணி  நேரம்தான்  அன்வார்  அவரின்  வழக்குரைஞர்களுடன்  கலந்துபேச  அனுமதி  அளிக்கப்படுகிறதாம்.

சிறையில்  உள்ள  அன்வார்  16  வழக்குகளில்  சம்பந்தப்பட்டிருக்கிறார்  என்பதால்  வழக்குரைஞர்களுடன்  ஒரு  மணி  நேரம்  கலந்துரையாடுவது  போதுமானதல்ல  என்று  அவருடைய  இன்னொரு  முன்னாள்  வழக்குரைஞர்  என்.சுரேந்திரன்  கூறினார்.