அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் தலைமையில் சரணடைந்தவர்கள் எங்கே?: போராளி உமாபதியின் மனைவி சாட்சியம்

umaapathi_wifeமுல்லைத்தீவு நீதிமன்றில் இராணுவம் தெரிவித்தது போன்று அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் தலைமையில் சரணடைந்தவர்களின் பெயர் விபரம் வெளியிடப்படவேண்டும். அதனுடாக ஆணைக்குழு தனது கணவனை கண்டுபிடித்து தரவேண்டும் என போராளி பரராஜசிங்கம் உமாபதியின் மனைவி திருமதி.உமாபதி ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கண்ணீர் மல்ல வேண்டுகோள் விடுத்துள்ளார்

மன்னாரில் நேற்று நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் சாட்சியங்களை பதிவு செய்யும் பொழுது ஆணைக்குழுவிடம் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனது சாட்சியத்தில்,

11 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்த  இந்த அரசால் வெளிப்படையாக பேருந்தில் ஏற்றி செல்லப்பட்ட 50 பேரின் விபரங்களை வெளியிட முடியாமைக்கான காரணம் என்ன? என அணைக்குழுவிடம் கேள்வியெழுப்பினார்.

அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் தலைமையில் எனது கணவர் பரராஜசிங்கம் உமாபதி உட்பட 50 போராளிகள் 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் அவர் எம்முடன் இன்றுவரை எந்தவித தொடர்புகளும் அற்று இருக்கின்றார்.

எனது கணவர் உட்பட 50 போராளிகளையும் அருட்தந்தை பிரான்சிஸ் யோசப்பையும்; ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான சிவப்பு நிற பேருந்தில் சென்றவர்களின் விபரம் இந்த ஏழு வருடங்களில் எமக்கு கிடைக்கப்பெறவில்லை எனவே இது தொடர்பாக எங்களுக்கு நீதிவேண்டும்.

11 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய இந்த அரசால் வெளிப்படையாக பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட இந்த 50 பேர் தொடர்பாக விபரங்களை வெளியிட முடியாமைக்கான காரணம் என்ன? எனது கணவனை தேடி கடந்த 7 வருடங்களாக நான் அலைந்து திரிகின்றேன்.

இறுதி யுத்தத்தின்போது அரசாங்கம் விடுதலைப்புலிகளை சரணடைய கூறியது. அதனடிப்படையில் எனது கணவர் 33 வயதில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். இன்றைக்கு அவருக்கு 40 வயது அவர் இருக்கின்றாரா? இல்லையா? என ஆணைக்குழு தெரிவிக்க வேண்டும்.

அருட்தந்தை பிரான்சிஸ் யோசப்புடன் சரணடைந்த போராளிகளில் ஆறு பேருக்கான ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நடந்துவருகிறது.

அதன்படி கடைசியாக நடைபெற்ற வழக்கின்போது வட்டுவாகல் பகுதியில் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் உள்ளது என சாட்சியமளித்து அதனை இராணுவம் ஒப்பு கொண்டுள்ளது.

அந்த பட்டியலின் அடிப்படையில் இம்மாதம் நடைபெறவுள்ள வழக்கில் குறித்த பட்டியலில் எனது கணவரின் பெயர் வரும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

இராணுவம் கூறுகிறது சசிதரன் என்றழைக்கப்படும் எழிலன் பெயர் தங்களிடம் இல்லை. ஆனால் வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் விபரம் எங்களிடம் இருக்கின்றது என்று ஆறு பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுவில் முதலாவது நபர் எளிலன். ஆனால் ஆட்கொணர்வு மனுவின் படி எளிலன் தொடர்பாக விசாரணையில் எளிலன் இல்லை என இராணுவம் கூறுகிறது. ஆனால் ஏனைய சரணடைந்தவர்களின் பட்டியல் இருப்பதாக கூறுகிறது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இந்த பட்டியலை இராணுவம் சமர்ப்பிக்கவேண்டும். அந்த பட்டியலில் சமர்ப்பிக்கப்பட்டால் எனது கணவரின் பெயரும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும். ஏன் என்றால் எனது கணவரும் அந்த இராணுவ முகாமில்தான் சரணடைந்தார். எனவே ஆணைக்குழு எனது கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என ஆணைக்குழு முன் கண்ணீர்மல்க சாட்சியமளித்தார்.

அவர் மேலும் சாட்சியமளிக்கையில், உறவுகளை இழந்த எங்களுக்கு இது தொடர்பாக விபரங்கள் கிடைக்காதா? என்று மிகவும் மன அழுத்தத்துடனும், வேதனையுடனும் எனது சாட்சியினை பதிவு செய்கின்றேன்.

குறிப்பாக இதே ஆணைக்குழுவில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் எனது சாட்சியங்களை பதிவு செய்திருக்கின்றேன் அதனால் எந்தஒரு பலனும் கிடைக்கவில்லை, இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் பதிவு செய்திருன்கின்றேன் அங்கும் எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

சாட்சியங்களை பதிவுசெய்து, பதிவு செய்து களைத்துப்போன நான் இது ஒரு கடைசி முயற்சியாக இந்த அணைக்குழுவிடம் சாட்சியங்களை பதிவு செய்ய வந்திருக்கின்றேன். நீங்கள் என்ன தீர்வு தரப்போகிறீர்கள் என்பதினை காலம்தான் சொல்லவேண்டும் என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: