தற்கொலை அங்கி, கிளேமோர் குண்டுகள் 10 வருடங்கள் பழைமை வாய்ந்தவையாம்!

arms-chavacheriயாழ்ப்பாணம், சாவகச்சேரி, மறவன்புலவு பகுதி வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியன 10 முதல் 15 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டவை எனவும், விடுதலைப் புலிகளின் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டவை என்றும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வா தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுக்கும் விசாரணைகளிலேயே இது தொடர்பான தகவல்கள் வெளிப்பட்டுத்தப்பட்டுள்ளன.

குறித்த தற்கொலை அங்கி, கிளைமோர் வெடிபொருட்கள் ஆகியன சுமார் 10 முதல் 15 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டவை என விசாரணைகளின் மூலம் ஊகிக்கப்பட்டுள்ளது.

எனினும் நேற்று மாலை வரையிலான விசாரணைகளில் இத்தனை பழைமையான தற்கொலை அங்கி உள்ளிட்ட ஆயுதங்களை சந்தேக நபர் எதற்காக வைத்திருந்தார் என்ற காரணம் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்த ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தன, எதற்காக மறவன்புலவு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டன, நாசகார வேலைகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தால், குறித்த சதி முயற்சி தொடர்பான பின்னணி ஆகியவற்றை வெளிப்படுத்த கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினரை பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுப்பு காவலில் வைத்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த புதன்கிழமை அன்று யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கியொன்றும், 4 கிளைமோர் ரகத்தைச் சேர்ந்த குண்டுகள், இரு கிளைமோர் ரக குண்டுகளை வெடிக்க வைக்கும் பற்றரிகள், 12 கிலோகிராம் நிறைகொண்ட அதிசக்தி வாய்ந்த 12 கிலோ டி.என்.டி.வெடிபொருட்கள், 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 100 தோட்டாக்கள் ஆகியன பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

இது தொடர்பில் முன்னாள் புலி உறுப்பினரான எட்வட் ஜூலியஸ் எனும் 30 வயதுடைய குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: