நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் முன்பு உரையாற்றிய பிடல் காஸ்ட்ரோ

fidel_castroகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

கியூபாவில் கம்யூனிசம் வேரூன்ற முக்கிய காரணமாக இருந்தவர் பிடல் காஸ்ட்ரோ.

கியூபாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த பட்டிஸ்டாவை கடந்த 1959 ஆண்டு தனது நண்பர் சே குவேராவுடன் இணைந்து விரட்டியடித்தார்.

பின்னர் அந்நாட்டின் அதிபராக காஸ்ட்ரோ பதவியேற்றார். இதற்கிடையில் கியூபா மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா, காஸ்ட்ரோவை கொல்ல பலமுறை முயற்சி செய்தது.

எனினும் அதிலிருந்த தப்பிய காஸ்ட்ரோ தனது நாட்டை முன்னேற்ற பெரும் முயற்சிகள் மேற்கொண்டார்.

பின்னர், வயது முதிர்வு காரணமாக கடந்த 2008ஆம் ஆண்டு தனது சகோதரரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தார்.

அப்போதிலிருந்து வீட்டில் ஓய்வு எடுத்துவரும் காஸ்ட்ரோ அவ்வப்போது பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

கடைசியாக கடந்த ஆண்டு யூலை மாதம் பொதுநிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டார்

இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு இறந்துபோன பெண் போராளி ஒருவரின் பிறந்தநாள் தொடர்பாக ஹவானாவின் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இறந்த பெண் போராளி குறித்து சிறிது நேரம் பேசிய காஸ்ட்ரோ பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடினார்.

முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபாவுக்கு வந்ததை விமர்சித்து அரசாங்க பத்திரிகையில் காஸ்ரோ எழுதிய கட்டுரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com