கரையிறங்கிய இலங்கை புகலிட பெண்களை தடுக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!

eelam_rafugeesஇலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் இறங்கிய பெண்களை எச்சரிக்கும் வகையில் அந்நாட்டு காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் படகு இந்தோனேசியாவின் அச்சே பிராந்திய கடற்கரையில் கடந்த சனிக்கிழமை கரையொதுங்கியது.

குறித்த படகிலுள்ள புகலிட கோரிக்கையாளர்களை தரையிறங்க விடாமல் அந்நாட்டு அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், படகில் இருந்த சிறுவன் ஒருவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, தம்மை தரையிறங்க அனுமதிக்குமாறும் புகலிட கோரிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், அதற்கு அதிகாரிகள் மறுப்பு வெளியிட்டுள்ள நிலையில், நேற்று படகில் இருந்த ஐந்து பெண்கள் கடற்கரையில் குதித்தனர். இதனால் அவர்களுக்கு சிறியளவில் காயங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து, அகதிகள் தரையிறங்குவதை தடுக்கும் நோக்கில் வானத்தை நோக்கி இந்தோனேசிய காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அத்துடன், தரையிறங்கிய பெண்கள், மீண்டும் படகில் ஏற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், படகின் இயந்திரத்தை திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: