அரசுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க த.தே.கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்து

tna_colombo_1நீண்டகாலமாக காணப்படும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு உட்பட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் முகமாக தேசிய அரசாங்கத்துடன் விரைவில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையொன்றை ஆரம்பிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து இவ்விடயங்களை கையாண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் சார்பில் தலா இருவர் வீதம் எண்மரடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி,

ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அதன் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் எம்.பி,

ரெலோ சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின்பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, அதன் மூத்த உறுப்பினரான ஸ்ரீகாந்தா ,

புளொட் சார்பில் அதன் தலைவர் சித்தார்த்தன் எம்.பி, அதன் மத்திய குழு உறுப்பினர் ஆர்.ராகவன் ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் நடைபெற்றது.

எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம்(ஜனா) , ஹென்றி மகேந்திரன், ஸ்ரீகாந்தா தருமலிங்கம் சித்தார்த்தன், சிவநேசன்(பவன்), ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

-http://www.tamilwin.com

TAGS: