தமிழ்த் தலைவர்களின் மனங்களில் குற்ற உணர்வு தோன்றவில்லையா? – மு.திருநாவுக்கரசு

tamil leadersதமிழ் மக்களின் அரசியலை அதற்கான இயங்கு நிலையில் இருந்தும் அதன் இருதயத்தில் இருந்தும் பார்க்கத் தவறுகிறோம். தமிழ் மக்கள் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பது சிறிதும் ஐயமற்ற உண்மையாகும். ஆனால் இவ்வாறு ஏமாற்றப்படுவதில் அதிக பங்கு எதிர்த் தரப்பைச் சாருமா அல்லது தமிழ்த் தலைவர்களின் தரப்பைச் சாருமா என்று கேட்டால் அதற்கான பதில் மிகவும் வியப்பானது.

அதனையிட்டு நாம் ஓர் இயங்கு முறை, அணுகு முறை (Functional Approach) ஆய்வை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதன் போது இதற்கான உண்மைகள் தெளிவாகத் தெரிய வரும். ஈழத் தமிழ் மக்கள் இயல்பாகவே போர்க் குணம் கொண்டவர்கள். அர்ப்பணிப்பு உள்ளவர்கள். கடும் உழைப்பாளிகள். அதே வேளை அவர்கள் எப்போதும் தலைவர்களை நம்பும் இயல்புள்ளவர்கள். தியாகத்திற்குத் தயங்காதவர்கள்.

குடும்பம் என்னும் அச்சில் இந்த இயல்புகள் அனைத்தையும் ஒருங்கு சேரக் காணலாம். சீதனம், சிக்கனம், சம்பாத்தியம், நீண்ட கால குடும்ப நோக்கு இவை ஈழத் தமிழர்களிடம் அநேகமாக உண்டு. அதுவும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகம் உண்டு. கல்வியில் அதிகம் நாட்டம் செலுத்தும் இயல்புள்ளவர்கள். அறிவின் மீதான பற்றினாலன்றி உத்தியோகத் தேவையிலான பற்றினால் கல்வி மீது அதிக நாட்டமுண்டு.

கல்வி அறிவுக்கு ஏதுவான ஒரு கருவியே தவிர கல்வி மட்டும் அறிவாகி விடாது. எப்படியோ சீதனம், வீடு, வாசல், காணி, சம்பாத்தியம், உத்தியோகம், கல்வி இவையனைத்தும் ஒரு கோட்டில் இணைபவை. மகன் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென்பதற்காக தாய் கடும் விரதம் இருப்பாள்.

அண்ணன் அல்லது தம்பி பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென்பதற்காக சகோதரி விரதமிருப்பாள். ஒரு வகையில் ஆண்களை மையமாகக் கொண்ட இந்த மேலாண்மையில் அண்ணனுக்கு நடுமுறியும் தங்கைக்கு வால் துண்டும் அண்ணனுக்கு முட்டைப் பொரியலும் தங்கைக்கு கிழங்குப் பொரியலும் கொடுக்கும் ஒரு பாரபட்சம் ஒரு புறம் இருக்கும் போதும் தங்கைக்கு நல்ல மணமகன் வேண்டி வேல்குத்தி காவடி எடுக்கும் அண்ணன்மாரும் மற்றும் ஆண் சகோதரர்களும் இருப்பார்கள்.

இதை விடவும் வியப்பிற்குரியது பேரப்பிள்ளைகளின் வெற்றிகளுக்காக பாட்டி விரதமிருப்பதும் தீச்சுவாலை வீசும் கற்பூரச் சட்டி ஏந்துவதும் தமிழ்ச் சமூகத்தின் வேர்களில் ஒன்று. இந்த குடும்ப மைய விசுவாசம் (Loyalty) “தமிழ்த் தேசியம்” என்று வந்த போது அது “கரும்புலி” வரை செல்ல வழி வகுத்தது. இந்த மக்கள் கூட்டம் குடும்பத் தலைவனை அல்லது மூத்த மகனை நம்பியது போல தமது அரசியல் தலைவர்களையும் நம்பியது.

இந்த வரிசையில் “தந்தை” என்றும் “அண்ணர்” என்றும் “தம்பி” என்றும் “அண்ணை” என்றும் “அண்ணா” என்றும் தங்கள் தலைவர்களை குடும்ப உணர்வோடு இணைத்து அழைக்கும் பழக்கம் தமிழ் மக்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது. மேற்படி இவற்றை புரிந்து கொண்டால் மட்டுமே தமிழ் மக்களுக்கான தமது பொறுப்பு என்ன என்பதை தலைவர்களால் உணர்ந்து கொள்ள முடியும். இதனைப் புரிந்து கொள்ளாத வரை இந்தப் பொறுப்பை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது.

ஒரு வகையில் கடவுளிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டிருப்பது போல தமிழ் மக்கள் தம் தலைவர்களை நம்பி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தலைவர்கள் கேட்கின்றவாறெல்லாம் செயற்படுகின்ற அவர்களை கேள்வி கேட்காது பின்பற்றுகின்ற அப்பாவித்தனமான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களின் நம்பிக்கைக்கு தீங்கிழைப்பது எத்தகைய மாபெரும் குற்றம் என்பதை யாராவது உணர்ந்திருப்பார்களோ என்றால் அதற்கான பதில் ஐயத்திற்குரியதே.

தமிழ் மக்கள் அதிகம் இலட்சியபூர்வமானவர்கள். புராண இதிகாச படலங்களினால் இவர்களின் கருத்துலகம் பாரம்பரியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் இலட்சியத்தின் பேரால் இவர்களை இலகுவாக ஏமாற்ற முடியும். பாலியல் தூய்மை என்பது உண்டோ இல்லையோ என்பது வேறு விடயம். பாலியல் தூய்மைகளை சிறிதும் பின்பற்றாதவன் கூட பாலியல் ரீதியான இலட்சியத்தை முன்வைப்பவனை பெரிதும் ஆதரிக்கும் கலாச்சாரம் இவர்களிடம் உண்டு.

தான் நீதிமானோ இல்லையோ என்பதல்ல பிரச்சினை நீதியின் பேரால் முன்வைக்கப்படும் இலட்சியத்தை ஆதரிப்பதை பண்பாடாகக் கொண்டவர்கள். இந்த அடிப்படையில் இருந்து ஈழத் தமிழர்களின் அரசியல் வாழ்வை எடை போட வேண்டியது அவசியம்.

மகாத்மா காந்தியைப் போல் இந்தியாவை அதிகம் புரிந்து கொண்டவர்கள் யாரும் கிடையாது. அப்படியே எம்.ஜி.இராமச்சந்திரனைப் போல் தமிழகத்தைப் புரிந்து கொண்டவர்கள் யாரும் கிடையாது. மகாத்மா காந்தியின் “அரை நிர்வாண ஆடையில்” அப்பாவிகளான சராசரி இந்திய ஏழைகளைக் காணலாம். சன்னியாசிகள், ரிஷிகள், சித்தர்கள், துறவிகள் போன்றோரின் ஆடையும் இதுதான்.

அவர் உப்பு சத்தியாக்கிரகத்தை மேற்கொண்ட போது அரைச் சதம் கூட பெறாத உப்பை போராட்டத்திற்கான கருவியாக மாற்றிக் கொண்டதன் நோக்கம் உப்புச் சிரட்டையற்ற எந்த வீடும் கிடையாது என்ற அடிப்படையிலாகும். அதாவது ஒவ்வொரு இந்தியனையும் மிக அடி மட்டத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கான வழியாக காந்திக்கு அந்த “உப்பு” தெரிந்தது.

இலட்சியப் பற்றுக் கொண்ட தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் இலட்சியங்களை தனது திரைப்படங்களுக்கான கருப் பொருளாக்கினார்.

தாய்ப் பாசம், தங்கைப் பாசம் என்பனவற்றையும் அரசியல் அறம் சார்ந்த இலட்சியங்களையும் மக்கள் முன் பெரிதாக பிம்பப்படுத்தினார். அதுவே அவரை மக்கள் தலைவாராக்கியது. இப்படி பண்பாட்டு அலகுக்கூடாக ஈழத் தமிழரின் அரசியலையும் எடை போட வேண்டும்.

தேசிய யுகத்தில் அவர்களுக்கு அப்போதைய தமிழ் நடுத்தர வர்க்கம் காட்டிய தேசியத்தையே அவர்கள் பின்பற்றினார்கள். உண்மையில் அன்றைய தமிழ் நடுத்தர வர்க்கம் கண்ட அல்லது காட்டிய தேசியம் போலியானது. ஆனால் அதனை அவர்கள் உண்மையாகவே நம்பினார்கள். இதனை பரந்த மக்கள் நம்பிப் பின்பற்றினார்கள்.

“தேசியம்” என்பது காலகட்ட வளர்ச்சிக்குரியது. பண்டை தேசியம், நவீன தேசியம், புதிய தேசியம் என அது பெரும் கால கட்ட வரலாற்றுப் போக்குகளைக் கொண்டுள்ளது.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருப்பெற்ற நவீன தேசியத்திலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய புதிய தேசியம் வேறுபாடானது.

1990 ஆம் ஆண்டு பனிப்போர் முடிந்ததைத் தொடர்ந்து இந்தப் புதிய தேசியம் உருப்பெற்றது. இக்கட்டுரையின் நோக்கம் இதனை ஆராய்வதல்ல. ஆனால் ஒரு வளர்ச்சிக் கட்டத்தையும் அதன் வேறுபாட்டையும் சுட்டிக் காட்டுவது மட்டுமே.

வேதத்தில் “தத்துவமசி” என்று ஒரு கூற்றுண்டு. அதாவது “நீ அதுவாக இருக்கிறாய்” என்பது அதற்கான பொருளாகும். இதன்படி “அது” என்பது “இறைவன்”. ஆகவே “நீ இறைவனாய் இருக்கிறாய்” என்பது அதன் பொருள். ஆனால் தேசியத்தில் “அது நீயாக இருக்கிறாய்” என்று அதற்கு தலை கீழான கூற்றுண்டு.

இதன்படி நிலம், நீர், காற்று என்பனவெல்லாம் நீயாக இருக்கின்றன என்பது பொருள். அதாவது “நீ” என்பது அந்த நிலத்தில் தங்கியுள்ளது. “நீ” என்பது அந்த நீரில் தங்கியுள்ளது. “நீ” என்பது அந்த காற்றில் தங்கியுள்ளது. எனவே இங்கு “நீ” என்று சொல்லப்படுகின்ற அனைத்தும் “தாய் நாடாகிறது”.

மனிதன் இயற்கையின் ஓர் அம்சம் மட்டுமல்ல. அவனே இயற்கையின் அதி அற்புதமான பகுதியுமாவான். மனிதனுக்கு ஊறு விளைவிப்பதென்பதும் மனித இனத்தை அழிப்பதென்பதும் இனப் படுகொலை புரிவதென்பதும் உன்னதமான இயற்கையை மறுப்பதும் அதற்கு பெருந் தீங்கிழைப்பதாகும். இயற்கையின் ஓர் அங்கமான மனிதன் வெறுமனே பௌதீக பண்டமல்ல.

மொழி, பண்பாடு, வாழ்கை முறை, வழிபாடு, பழக்கவழக்கம், பாரம்பரியங்கள் போன்ற அகம் சார்ந்த அம்சங்களையும் கொண்டவனாவான். “பண்பாடு என்பது உருளைக் கிழங்கல்ல” என்ற ரெஜி டிப்ரேயின் கூற்றும் கவனத்திற்குரியது.

இதன்படி பண்பாடும் “நீயாக” இருக்கிறது. தாய் மொழியும் வாழ்க்கை முறையும் கூடவே “நீயாக” இருக்கின்றன. எனவே தேசியம் என்பது அவன் சார்ந்த நிலம், நீர், காற்று மற்றும் வளங்களுடன் கூடவே அவனது பண்பாட்டு அம்சங்களையும் சேர்த்த ஓர் உருத் திரட்சியாகும்.

இந்த வகையில் தேசியம் என்பது உயர்ந்த குறிக்கோளின் அடிப்படையிலான இயற்கையையும் அது சார்ந்த மனிதனையும் வளங்களையும் மற்றும் உயிரினங்களையும் பாதுகாத்து பேணி வளர்ப்பது பற்றிய ஒரு சத்தியத்தைக் கொண்டது. பரந்த பூகோளத்தையும் இயற்கையையும் பாதுகாக்கின்ற பெரும் பணியின் ஒரு பகுதியாக அவனவன் சார்ந்த பகுதியை பாதுகாப்பதில் பேணி வளர்ப்பதில் தேசியம் தலையாய பங்கு வகிக்கின்றது.

எனவே அரும்பெரும் பரந்த இயற்கையை பாதுகாக்கும் பணியின் ஓர் உன்னதமான அங்கமே தேசியம் சார்ந்த கடமையாகும். தேசியத்தின் பேரால் அவன் நிலத்தையும் அந்த நிலத்தின் கற்பையும் அந்த நிலத்தின் வளங்களையும் பாதுகாக்கின்றான். நீரை மாசுபடாது பேணி மனித குலத்திற்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் அளிக்கின்றான்.

இதனால் தேசியம் என்பது நிலம், நீர், காற்று, காடு, பயிர் மற்றும் உயிரினங்களையும் தழுவிய ஒன்றாக இருப்பதுடன் மனிதனுக்கு அந்த வளங்களை தேசியத்தின் பேரால் பங்கீடு செய்வதில் அனைத்து வகை ஜனநாயத்தையும் கொண்ட ஓர் அங்கமாகவும் அது அமைந்து விடுகிறது. இந்த வகையில் ஈழத் தமிழரின் தேசியப் போராட்டம் என்பது பரந்த உலகம் தழுவிய இயற்கைக்கான சத்தியத்தின் ஒரு பகுதியாகவும் பரந்த மனித நாகரீகத்தின் ஓர் அங்கமாகவும் மனித உரிமைகளின் ஒரு தொகுதியாகவும் காணப்படுகிறது.

தேசியம் இல்லையேல் ஜனநாயகமும் இல்லை. மனித உரிமையும் இல்லை. இயற்கைக்கு பாதுகாப்பும் இல்லை. ஈழத் தமிழரின் தேசியம் அவர்களின் தாயகத்தை அடிப்படையாயக் கொண்டது. ஆனால் அவர்களின் தேசியத்தை தோற்கடிப்பதற்காக எதிர்த் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் முதல் வரியைச் சார்ந்தது அவர்களின் தாயகத்தை ஆக்கிரமிப்பதாகும். “ஈழத் தமிழர்கள் ஒரு நாள் பிரிந்து சென்று இந்தியாவின் ஒரு மாகாணமாக இணைந்து விடுவார்கள்” என்ற அச்சம் சிங்களத் தலைவர்களிடம் உண்டு.

இது பற்றிய கவலையை டி.எஸ்.செனநாயக்க ஓர் ஆங்கில அதிகாரி அல்லது ஓர் ஆங்கில இராஜ தந்திரியுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அப்போது அதற்கு அந்த ஆங்கில நபர் அளித்த பதில் பின்வருமாறு அமைந்ததாகவும் ஒரு செவி வழி கருத்துண்டு. அதாவது கேக்கை துண்டு துண்டாக வெட்டி சாப்பிடுவது போல கிழக்கு மாகாணத்தை சிங்களக் குடியேற்றத்தின் வாயிலாக துண்டு துண்டாக சிங்கள மயமாக்கி விட்டால் கிழக்கற்ற வறண்ட வடக்கு இந்தியாவிற்குத் தேவைப்படாது.

எனவே சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதே இதற்கான சிறந்த வழியென்று அவர் ஆலோசனை கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. டி.எஸ்.செனநாயக்கவின் விவசாய அமைச்சில் ஓர் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர் தமிழரான ஸ்ரீகாந்த என்பவர் அவரது அந்திம காலத்தில் (1980) நான் அவரைச் சந்தித்து அவரது அனுபவங்களைச் சேகரிக்க முயன்றேன். ஆனால் மூன்று சந்திப்புக்களோடு அவரை சந்திக்க முடியாதவாறு அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.

அந்த சந்திப்பின் போது மேற்படி அந்த கூற்றை டி.எஸ்.செனநாயக்கவிடம் கூறிய விடயம் பற்றிய தகவல்களை அவரிடம் கேட்டறிய முயன்றேன். அப்போது அப்படியொரு தகவலை தானும் செவி வழியாக அறிந்திருப்பதாகவும் ஆனால் அந்த ஆங்கிலேயர் பற்றிய பெயரோ அல்லது தகவல்களோ எதுவும் தனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார்.

எப்படியோ திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் தமிழ்த் தாயகத்தை ஆக்கிரமித்து சிதைத்து விட வேண்டும் என்ற முடிவை கொண்டிருந்த டி.எஸ்.செனநாயக்க அதனை உறுதியாக நடைமுறைப்படுத்தவும் தவறவில்லை. வெற்றி கொள்ளப்பட்ட பிரதேசத்தில் ஓர் இராணுவ முகாமை அமைப்பதை விடவும் அங்கு வெற்றி பெற்றோர் தமது குடியேற்றங்களை மேற்கொள்ளவது மிகவும் சிறந்ததெனப்பட்டது.

ஆனால் குடியேற்றங்கள் தமக்கானவற்றை தாமே உற்பத்தி செய்து கொள்ளும் என்றும் எனவே இராணுவ முகாம் அமைப்பதை விட குடியேற்றங்களை மேற்கொள்வது மேலானது என்ற மேற்கத்திய இராஜ தந்திரியான மார்க்கியவல்லியன் கருத்தை டி.எஸ்.செனநாயக்க அப்படியே பின்பற்றி செயற்பட்டுள்ளார் எனத் தெரிகிறது. 1949 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கல்லோயா திட்டக் குடியேற்றம் இவற்றிற்கான முத்தாரமாய் அமைந்தது.

வடக்கிலிருந்து கிழக்கைப் பிரிப்பதன் மூலம் கிழக்கையும் அழித்து வடக்கையும் அழித்திடலாம் என்ற சிந்தனையே இலங்கை இனப் பிரச்சினையின் மிகக் கூர்மையான பகுதியாகும். எப்படியோ 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தொடர் நிலப்பரப்பு என்பதை சிங்களத் தலைவர்கள் கவனத்தில் எடுத்துள்ளனர்.

1925 யூன் 28 ஆம் தேதி தமிழ்த் தலைவர்களுடன் சிங்களத் தலைவர்கள் கையெழுத்திட்ட “மகேந்திர” ஒப்பந்தத்தில் வடக்கு டிவிசென் எனப்படுவது வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கிய பகுதி என்ற கருத்துண்டு (By the Northern Division of the Island is meant the Northern and Eastern Provinces). ஆனால் சிங்களத் தலைவர்கள் பின்நாட்களில் கிழக்கு மாகாணத்தையும் வடக்கின் சில பகுதிகளையும் சிங்களக் குடியேற்றத்தால் சிங்கள மயமாக்குவதில் வெற்றி பெற்றுள்ளனர்.

கிழக்கையும் வடக்கையும் மணலாறு என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றத்தால் இரண்டாக துண்டறுத்து அந்த மணலாறுக்கு “வெலிஓயா” என்ற சிங்களப் பெயரையும் இட்டுள்ளனர். எப்படியோ சிங்களக் குடியேற்றத்திற்கு எதிரான கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றன.

இந்தியாவின் முயற்சியினால் 1984 ஆம் ஆண்டின் இறுதியில் “திம்புவில்” நிகழந்த “திம்பு பேச்சுவார்த்தைகளின்” போது தமிழ்த் தரப்பில் அனைத்து அரசியல் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து ஒரு குரலில் “தமிழர் தாயகம்” என்பது சமரசத்திற்கு அப்பாலானது என்பதை முதன்மைப்படுத்தினர்.

1987 ஆம் ஆண்டு “இலங்கை – இந்திய ஒப்பந்தம்” தொடர்பாக இந்திய பிரதமர் ரஜீவ் காந்திக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனுக்கும் இடையில் ஏற்பட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது வடக்கு – கிழக்கு தற்காலிக இணைப்பு என்று இருக்கும் சரத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென ரஜீவ் காந்தியிடம் பிரபாகரன் எடுத்துக் கூறினார் என்றும் அதற்கு பிரபாகரனின் தோளில் தன் கைகளால் ரஜீவ் காந்தி தட்டி பிரபாகரனின் கவனத்தை தன் பக்கம் ஈர்ந்தவாறு பின்வருமாறு கூறினார் என்றும் புலிகள் தரப்பில் பேசப்பட்டது.

அதாவது “வடக்கு – கிழக்கு இணைப்பு” என்பது நிரந்தரமானது என்றும் ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசை ஏற்கச் செய்வதற்காக தற்காலிக இணைப்பு என்ற சொல் பிரயோகிக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் உண்மையில் இணைப்பு நிரந்தரமானது என்றும் ராஜீவ் காந்தி கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால் பின்நாட்களில் வெறும் சட்ட நுணுக்க காரணத்தின் பேரால் வடக்கில் இருந்து கிழக்கை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டது. சிங்களத் தலைவர்கள் அரசியல் நெறிமுறைகளுக்கு புறம்பாக செயற்பட்ட ஒரு மிகப் பெரும் தீங்காகும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் வாயிலாக உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டம் என்பது யாரினது அன்பளிப்போ கொடையோ கிடையாது. தமிழ் மக்களின் இரத்தம் தோய்ந்த தியாகத்திற்குக் கிடைத்த ஒரு சிறு பெறு பேறாகும். இந்த 13 வது திருத்தச் சட்டம் அதன் வடிவில் போதாது என்று கூறியவாறு தமிழ் மக்கள் மத்தியில் அதற்கு ஆட்சேபனைகள் எழுந்தன.

இதனை புலிகள் மட்டுமல்ல அன்றைய தமிழர் ஐக்கிய முன்னணியும் போதாதென்றே கூறியது. ஆனால் தற்போது தற்காலிக இணைப்பும் பிரிக்கப்பட்ட பின்பு இந்த 13 வது திருத்த சட்டத்தின் கீழ் வடக்கையும் கிழக்கையும் தனித்தனி மாகாணங்களாகக் கொண்ட தீர்வுதான் முன்மொழியப்படும் நிலையுள்ளது.

வடக்கு – கிழக்கை ஓர் அலகாகக் கொண்ட இறைமையுடன் கூடிய சமஷ்டி அமைப்பு முறையிலான தீர்வை தாம் பெற்றுத் தருவோம் என்றும் இதற்காக “நல்லாட்சி அரசாங்கத்தை” உருவாக்க ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கு வாக்களிக்குமாறும் அதன் மூலம் ரணில் விக்கிரமசிங்காவை பிரதமராக்க உதவுமாறும் தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரி நின்றனர்.

மேலும் “போர்க் குற்ற சர்வதேச விசாரணை”, தமிழ்க் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு நீதி, நிவாரணம் வழங்குதல் உட்பட்ட வாக்குறுதிகள் தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்டன. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் உருவாகி 2 ஆண்டுகளின் பின்பும் இவை அனைத்தும் நிறைவேற வில்லை என்பதுடன் மறுவளமாக இலங்கை அரசுக்கு இறுதிக் கட்ட யுத்தத்தின் மூலமாக ஏற்பட்டிருந்த அவமானம் மற்றும் சர்வதேச நெருக்கடிகள் என்பனவற்றை நீக்க தமிழ் மக்களின் ஆதரவு பயன்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லையேல் தமிழ் மக்களுக்கென்று ஏதுவும் இல்லை. இப்போது இருக்கும் 13 வது திருத்தச் சட்டத்தின் கீழான தீர்வை யாரும் பெற்றுத் தர வேண்டியதும் இல்லை. அது ஏற்கனவே தமிழ் மக்களின் தியாகத்தால் உருவான ஒன்று. மேலும் வடக்கு – கிழக்கு தற்காலிக இணைப்பு என்பதே அதில் உண்டென்பதுடன் நடைமுறையில் அது பிரிக்கப்படமாட்டாது என முன்னாள் இந்திய பிரதமரால் வாக்குறுதி அளிக்கப்பட்டும் இருக்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் திரும்பத் திரும்பக் கூறி வந்துள்ளார். ஜனாதிபதி சிறிசேன மீதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும் அம்மையார் சந்திரிக்கா மீதும் தமக்கு நம்பிக்கை இருப்பதாக அவர் கூறி வந்துள்ளார். அவர்களிடம் எழுத்து ரீதியான எந்த வாக்குறுதியையும் அவர் பெறுவதை விட வெறும் நம்பிக்கையை முதன்மைப்படுத்தினார்.

ஆனால் தற்போது வடக்கும் கிழக்கும் தனித்தனியாக மாகாணங்களாக அமையும் என்ற நிலையே உருவாகியுள்ளது. இங்கு தமிழ் மக்களை சிங்களத் தலைவர்கள் ஏமாற்றியுள்ளார்களா அல்லது தமிழ் மக்களை தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றுகிறார்களா என்ற கேள்வியே முதன்மையாக எழுகிறது. இதற்கு அச்சாரமாக 1965 ஆம் ஆண்டு டட்லி – செல்வா ஒப்பந்தத்தின் பின்னணியையும் உட் பக்கத்தையும் பெறுபேற்றையும் ஆராய்வது நல்லது.

1965 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிந்ததும் இரு பெரும் சிங்களக் கட்சிகளும் அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறின. தமிழரசுக் கட்சியின் கூட்டின்றி எந்த ஒரு கட்சியாலும் அரசாங்கம் அமைக்க முடியாது என்ற நிலையிருந்தது. அப்போது யாழ்ப்பாணத்தில் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்த செல்வநாயகத்துடன் தொடர்பு கொள்ள ஒரு புறம் ஐ.தே.காவும் மறுபுறம் டொக்டர் என்.எம்.பெரேராவும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

கொழுப்பில் அப்போதிருந்த மு.திருச்செல்வத்துடன் டட்லி செனநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன என்போர் தொடர்பு கொண்டனர். இது பற்றிய விவரங்களை அது வரை தமிழரசுக் கட்சியின் மூளையாக வர்ணிக்கப்பட்ட காவலூர் வி.நவரத்தினம் என்னிடம் தெரிவித்தார்.

காவலூர் நவரத்தினத்தின் அக்காலகட்ட அரசியல் அனுபவங்களை திரட்டுவதற்காக நான் அவரை 1980 ஆம் ஆண்டு பல தடவைகள் சந்தித்துள்ளேன். அப்போது மிக வளமான வரலாற்று முக்கியத்தும் மிக்க பல தகவல்களை அவர் என்னிடம் தெரிவித்திருந்தார். அதில் டட்லி – செல்வா ஒப்பந்தம் பற்றிய விவகாரமும் ஒன்று.

டொக்டர் என்.எம்.பெரேராவும் மற்றும் இடதுசாரிகளும் தமிழரசுக் கட்சியோடு ஓர் உடன்பாட்டிற்கு வந்து தமது பங்களிப்பின் பின்னணியில் பண்டா – செல்வா ஒப்பந்தத்திற்கு குறையாக ஒரு தீர்வை ஏற்படுத்த முடியும் என்று கருதினார்.

ஆனால் கொழும்பில் தங்கியிருந்த மு.திருச்செல்வத்துடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொடர்பு கொண்டிருந்த நிலையில் செல்வநாயகம் குழுவினர் கொழும்பை அடைந்ததும் அனைவரும் லேக் ஹவுஸ் காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டு அங்கு பூட்டப்பட்ட அறையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் டட்லி – செல்வா ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில் உள்ள தவறுகளை தான் சுட்டிக் காட்டியதாகவும் அதைத் தொடர்ந்து அதில் ஆங்காங்கே மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அந்த ஒப்பந்தத்தின் முதல் கையெழுத்து வரைபை அவர் என்னிடம் காட்டினார். டட்லி செனநாயக்க தனது பச்சை மை பேனாவினால் ஆங்காங்கே மேலும் கீழுமென வரிகளுக்கிடையே திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதை என்னிடம் காட்டினார். அவசர கதியியல் எழுதப்பட்ட அந்த ஒப்பந்தம் ஒரு சதியென்றும் அதற்கு மு.திருச்செல்வமே மூல காரணம் என்றும் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சி முழுமையாக ஐ.தே.காவுடன் ஒத்துழைத்தது. ஆனால் இந்த ஒப்பந்தப்படியான மாவட்ட சபைகள் அமைக்கும் மசோதாவை உருவாக்க ஐ.தே.கா மறுத்தது. அத்தோடு அந்த ஒப்பந்தம் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் அதன் பின்பும் மிகுதி 3 ஆண்டுகளும் ஐ.தே.க. பதவியில் இருக்க தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கத் தவறவில்லை. இதை விட வேறு நல்லிணக்கத்துக்கான உதாரணத்தை தமிழ்த் தரப்பிடம் கேட்க முடியாது.

எப்படியோ வெறும் கையுடன் தந்தை நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற வாக்கியத்துடன் 1970 ஆம் தேர்தலில் தமிழ் மக்களிடம் சென்றார். ஐ.தே.வினால் மேற்கொள்ளப்பட்ட ஏமாற்றல் 1967 ஆம் ஆண்டு வரைதான். ஆனால் அதன் பின் 3 ஆண்டு காலம் தமிழ் மக்களை ஏமாற்றியது ஐ.தே.க. அல்ல. தமிழ்த் தலைவர்கள்தான்.

1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபை சம்பந்தமான தீர்வு தேர்தலும் தமிழ் மக்களிடம் முன்வைக்கப்பட்டது. அப்போது அதனை அனைத்து ஆயுதம் தாங்கிய அமைப்புக்களும் எதிர்த்தன. இந்நிலையில் ஒரு நாள் வே.பிரபாகரன் என்னிடம் பின்வருமாறு கூறினார். “தந்தை செல்வாவை தகப்பன் திருச்செல்வம் கெடுத்தார்.

தற்போது அண்ணர் அமீரை திருச்செல்வத்தின் மகன் நீலன் திருச்செல்வம் கெடுக்கிறார்”. இக்காலத்தில் ஜே.ஆர். – அமீர் இருவருக்கும் இடையே உருவான உடன்பாட்டின் அடிப்படையிலான மாவட்ட அபிவிருத்திச் சபை அமைப்பிற்கான சூத்திரதாரி நீலன் திருச்செல்வம் எனக் கருத்தப்பட்டது.

ஆதலால்தான் பிரபாகரன் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார். பேபி சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் இளங்குமரன் காவலூர் நவரத்தினத்துடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தவர். அவர் வாயிலாகவே மு.திருச்செல்வம் பற்றிய கருத்துக்களை பிரபாகரன் அறிந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். தந்தை செல்வா முதலில் கோப்பாய் கோமகன் எனப்படும் வன்னிய சிங்கத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தவர். வன்னிய சிங்கத்திடம் தமிழ் மண்ணோடு ஒட்டிய வாழ்வும் சிந்தனையும் இருந்தது.

இவர்தான் ஆரம்ப காலத்தில் தமிழ்த் தேசியம் பொறுத்து செல்வநாயகத்துடன் மிக நெருக்கமாக காணப்பட்டவர். இவரின் பின்பு தமிழரசுக் கட்சியின் மூளையென வர்ணிக்கப்பட்டவர் காவலூர் வி.நவரத்தினமாவார். அதன் பின்பு 1965 ஆம் ஆண்டிலிருந்து செல்வநாயகத்தின் தீர்மானத்தில் பெரும் பங்கெடுக்கத் தொடங்கியவர் மு.திருச்செல்வம் ஆவார்.

எது எப்படியோ தமிழ்த் தலைவர்களால் தமிழ் மக்களின் உரிமைகளை நிலை நாட்ட முடியாது போனது. இவ்வாறான தோல்விகளுக்கான காரணங்களை கண்டறியவோ தமது அரசியல் தவறுகளை எடை போடவோ தமிழ்த் தலைவர்கள் ஒரு போதும் தயாராக இருக்கவில்லை. 1965 ஆம் ஒப்பந்தத்தையும் அதன் நடைமுறைகளையும் பற்றி கற்றறிந்தால் இன்றைய நிலையில் செய்ய வேண்டியவை என்பனவற்றை கண்டறிவதில் கஷ்டமிருக்காது.

2005 ஆம் ஆண்டு எனக்கு ஓர் அரிதான ஆவணம் தேவைப்பட்ட போது அதனைப் பெறுவதற்காக அதிகாலை 5-30 மணியளவில் பேபி சுப்ரமணியத்தின் வீட்டிற்குச் சென்றேன். அந்த நேரம் நூல்களை பாதுகாப்பாக அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். என்னைக் கண்டதும் அவசர அவசரமாக மேற்சட்டையை அணிந்தார்.

இதன் பின்பு ஒரு சுவாரஸ்சியமான சம்பவம் நிகழ்ந்தது. அவரது வீட்டில் மாட்டப்பட்டிருந்த பெரியார் ஈவேராவின் படத்தைக் கண்டதும் நான் பின்வருமாறு அவரிடம் கூறினேன். அதாவது பரப்புரைப் பொறுப்பாளர் ரமேசின் முகாமிலும் உங்கள் வீட்டிலும் மட்டும்தான் நான் ஈவேராவின் படத்தைக் காண்கிறேன். வேறு எங்கும் கிடையாது என்றேன். அவர் எனக்கு தனது பெரும் சிரிப்பை எனக்குப் பதிலாக்கினார். அவர் அப்படி நீண்ட நேரம் பெரிதாக சிரித்ததை நான் கண்டதில்லை.

சிரிப்பு ஓய்ந்ததும் பின்வருமாறு கூறினார். அதாவது தனது வீட்டிற்கு ஓர் உயர் கல்வி அதிகாரி ஒரு முறை வந்ததாகவும் ஈவேராவின் அந்தப் படத்தைப் பார்த்து அது எனது தந்தையாருடையதா அல்லது எனது தாத்தாவினுடையதா என்று கேட்டதாகவும் கூறி மீண்டும் சிரித்தார். அந்த உயர் கல்வி அதிகாரிக்கு தெரிந்திருக்காத அளவிற்குத்தான் ஈவேரா பற்றிய பரீட்சயம் இருந்தது. அப்போது நான் பேபி சுப்ரமணியத்திடம் பின்வருமாறு கூறினேன்.

அதாவது ஈழத் தமிழர் வீடுகளில் காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், சுவாமி இராமகிருஷ்ணர் போன்றோரின் படங்கள் இருக்கும். ஒரு சிங்களத் தலைவருடைய படமும் இருக்காது. அது மட்டுமல்ல ஆங்காங்கே அரிதாக ஜி.ஜி.பொன்னம்பலத்தின் படமும் செல்வநாயகத்தின் படமும் இருக்கும். ஏன் தமிழ்த் தலைவர்களின் படங்கள் தமிழ் மக்களின் வீடுகளில் பெரிதும் இடம்பெறவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா என்று கேட்டேன்.

அந்த கேள்வி அவருக்கு வியப்பை ஏற்படுத்தியது. அவர் இந்தியப் பாணியில் “ஆமா” நல்ல கேள்விதான் நான் ஒரு போதும் இப்படி யோசிக்கவில்லை என்றார். அதற்கு நான் பின்வருமாறு பதிலளித்தேன். “வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர்களையும் சாதனைகளை நிலை நாட்டியவர்களையும்தான் மக்கள் தங்கள் மனங்களில் நிறுத்திக் கொள்வார்கள்” என்றேன்.

பொன்னப்பலத்தினதும் செல்வநாயகத்தினதும் படங்கள் தமிழ் மக்களின் வீடுகளை பெரிதும் அலங்கரிக்காததற்கான காரணத்தை அவர் புரிந்து கொண்டார் போல் தெரிந்தது. இன்றைய தமிழ்த் தலைவர்களுக்கும் இந்த உண்மையைத்தான் இங்கு கூறி வைக்க முடியும்.

தமிழ் மக்களுக்கு 13 வது திருத்தச் சட்டம்தான் தீர்வு என்றால் அதைப் பெற்றுக் கொடுக்க யாரும் தேவையில்லை. யுத்த அழிவு ஒரு சாபமாக இருந்தாலும் அந்த அழிவின் விளைவால் தமிழ் மக்களை நோக்கி சர்வதேச கதவுகள் திறந்தன. அந்தக் கதவுகள் அது வரை புரியப்பட்ட இழப்புக்களின் பெறு பேறாக அமைந்தன. அந்த பெறு பேறு இலங்கை அரசைச் சர்வதேச அரங்கில் அவமானப்படுத்தியதுடன் இலங்கை அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தின.

இந்த சர்வதேச கதவுகளையும் இலங்கை அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் முதலீடாகக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைகளை நிலை நாட்ட வேண்டியதே வரலாற்றுப் பொறுப்பாக அமைந்தது. ஆனால் சிங்களத் தலைவர்களோ தமிழ்த் தரப்பை அணைத்து தம்மை சர்வதேச அவமானங்களிலும் நெருக்கடிகளிலும் போர்க் குற்ற விசாரணைகளில் இருந்தும் விடுவித்து விட்டனர் என்று தெரிகிறது.

மக்கள் கருத்தறியும் செயலணியின் இறுதி அறிக்கையை ஜனாதிபதியின் சார்பில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனவரி 4 ஆம் தேதி அன்று பெற்றுக் கொண்டார். மனோரி முத்துவெட்டுகம தலைமையிலான அந்த அறிக்கையில் போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதி விசாரணை அவசியம் என்றும் குறைந்தது ஒரு நீதிபதியாவது வெளிநாட்டவராக இருக்க வேண்டுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித செனரத்ன “அப்படி எந்தொரு சர்வதேச நீதிபதியையாவது நியமிப்பதில்லை என்பதே அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாடாகும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் யாருக்கு யாரால் லாபம்? என்ற கேள்வியே முதன்மை பெற்று நிற்கின்றது. “அறப் போர் தொடுப்போம். தூக்கு மேடை பஞ்சு மெத்தை, துப்பாக்கிச் சூடு பந்து விளையாட்டு” என்று தந்தை செல்வா தலைமையில் 1961 ஆம் ஆண்டு சாத்வீகப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது தமிழ் மக்கள் முழு அளவில் திரண்டெழுந்து 62 நாட்களாய் அவர் பின்னே சென்றார்கள்.

அப்படித்தான் இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி அதன்படி செயற்பட்டுள்ளார்கள். இனி மிஞ்சப்போவது என்ன? வடக்கு – கிழக்கை பிரிப்பதற்கு எதிராக அவர்களுக்கு வாக்குறுதி அளித்த வெளிநாடுகளை பொறுப்புக்கு உட்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளப் போகிறார்களா அல்லது 1967 ஆம் ஆண்டின் பின்பும் ஐ.தே.க.வை பாதுகாத்தது போல் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கப் போகிறார்களா அல்லது அரசாங்கத்திற்கு உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியான நெருக்கடிகளை ஏற்படுத்தி தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டப் போகிறார்களா என்பதெல்லாம் இமாலய கேள்விகளாய் எழுந்துள்ளன.

இம்முறை வெறும் கையுடன் திரும்ப முடியாதளவிற்கு தமிழ் மக்கள் தரப்பில் தெளிவான சர்வதேச வாய்ப்புக்கள் இருந்துள்ளன. அவற்றை எவ்வளவு தூரம் தமிழ்த் தரப்பு கையாண்டுள்ளது என்பதை இன்றைய நிலைமை கேள்விக்குள்ளாக்கி நிற்கின்றது.

-http://www.tamilwin.com

TAGS: