வலுக்கும் பனிப்போர் : வடகொரியாவை மிஞ்சிய தென்கொரியா

வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு பதிலடிகொடுக்கும் வகையில், தென்கொரியா ஏவுகணை பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அண்மைய காலமாக ஏவுணை பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையினால் அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், உலக நாடுகள் பலவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

எனினும், அவை எதனையும் பொருட்படுத்தாமல் வடகொரியா, கொரிய தீபகற்பத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சமீபத்தில் ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை பரிசோதனை ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகளிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளன. இந்நிலையில், பிராந்திய பதற்றத்தை தணிக்கும் நோக்கிலும், வட கொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கிலும் தென் கொரியா புதிய ஏவுகணை பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஏவுகணையானது 800 கி.மீ. தூரம் வரை சென்று வடகொரியாவின் எந்த நகரையும் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வட கொரியாவின் ஆயுத உற்பத்திக்கு முடிவு கட்டும் வகையில் அமெரிக்காவும் சீனாவும் இணைந்து விரையில் முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும் என சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-tamilwin.com