குர்திஸ்தான் பகுதிக்குச் செல்லும் சர்வதேச விமானங்களை நிறுத்தியது இராக்

இராக்கின் வட பகுதியில் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் குர்திஸ்தான் விடுதலைக்கு ஆதரவாக 92 சதவீத மக்கள் வாக்களித்துள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பை எதிர்த்துவரும் இராக் மத்திய அரசு, குர்திஸ்தான் பகுதிக்குச் செல்லவேண்டிய, அங்கிருந்து வெளியே வர வேண்டிய சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது.

குர்திஸ்தான் பகுதியில் உள்ள இர்பில், சுலைமானியா விமான நிலையங்களின் கட்டுப்பாட்டை தங்களிடம் ஒப்படைக்காவிட்டால், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் உள்நாட்டு விமானங்கள் மட்டுமே அங்கு செல்லும் என்று பாக்தாத் அறிவித்துள்ளது.

“இங்கே சர்வதேச சமூகம் இங்கே இருக்கிறது. எனவே இந்த நடவடிக்கை குர்து மக்களுக்கு மட்டும் எதிரானதல்ல,” என்று பிபிசியிடம் வியாழக்கிழமை தெரிவித்தார் இர்பில் விமான நிலைய இயக்குநர் தலார் ஃபைக் சாலி.

மனிதாபிமான, ராணுவ மற்றும் தூதரகம் சார்ந்த விமானங்களுக்கு இத் தடையில் இருந்து விலக்கு இருப்பதாக பிறகு அவர் கூறினார்.

விமான நிறுவனங்கள் இராக்குக்கு ஆதரவு

பாக்தாதின் கோரிக்கையை ஏற்று தங்கள் விமானங்களை ரத்து செய்யவுள்ளதாக லுஃப்தான்சா, ஆஸ்திரியன் ஏர் லைன்ஸ், துருக்கிஷ் ஏர் லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

குர்திஸ்தான் எதிர்வினை

இந்த தடை சட்டவிரோதமானது, குர்துக்களுக்கு எதிரான தண்டனை என்று குர்திஸ்தான் வட்டார அரசு கூறியுள்ளது.

இந் நிலையில், குர்திஷ் பேஷ்மேர்கா படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வளம் மிக்க கிர்குக் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு ராணுவத்தை அணுப்பும்படி இராக் பிரதமரை அந்நாட்டுப் பாராளுமன்றம் கேட்டுக் கொண்டதை எதிர்கொள்ள சட்ட நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகவும் குர்திஸ்தான் வட்டார அரசு சூளுரைத்துள்ளது.

ஏற்கெனவே, இர்பில், சுலைமானியா விமான நிலையங்கள் இராக் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

இந்தத் தடை ஐ.எஸ். படையினருக்கு எதிரான போரை பலவீனப்படுத்தம் என்றும் குர்திஸ்தான் வட்டார அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குர்து சிறுபான்மை மக்களைக் கொண்டுள்ள இரான், துருக்கி போன்ற அண்டை நாடுகளும் குர்திஸ்தான் வாக்கெடுப்பை எதிர்த்துள்ளதோடு, குர்திஸ்தான் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளன.

பிற நாடுகள் எதிர்ப்பு

கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இராக்கின் மத்திய அரசுடன் மட்டுமே தொடர்பு வைத்துக்கொள்ளவோம் என்று துருக்கி பிரதமர் பினாலி இல்திரிம் கூறியதாக இராக் பிரதமர் அபாதி தெரிவித்தார்.

குர்திஸ்தானுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்துவரும் சுத்திகரித்த கச்சா எண்ணை போக்குவரத்தை வெள்ளிக்கிழமை இரான் தடை செய்துவிட்டதாக டாஸ்நிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த கருத்து வாக்கெடுப்பை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என்று அந்நாட்டு ராஜீயத் துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

பின்னணி

கருத்து வாக்கெடுப்பின் முடிவுகளை ரத்து செய்யவேண்டும் என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி வலியுறுத்திவரும் நிலையில், குர்திஸ்தான் தலைவர்கள் அந்த வாக்கெடுப்பு ‘சட்டபூர்வமானது’ என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வாக்கெடுப்பின் முடிவுகள் பாக்தாத்துடனும் அண்டை நாடுகளுடனும் பிரிவினை தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தும் உரிமையைத் தங்களுக்கு வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்குப் பகுதியில் மக்கள் தொகைப்படி நான்காவது பெரிய மரபினம் குர்து இனம். எனினும் அவர்களுக்கு இதுவரை நிரந்தர தேசிய அரசு.

இராக்கில் அவர்கள் 15-20 சதவீதம் உள்ளனர். 1991ல் தன்னாட்சிப் பகுதி கிடைக்கும்வரை, குர்துக்கள் இராக்கில் பல பத்தாண்டுகளாக ஒடுக்குமுறைகளை அனுபவித்தனர். -BBC_Tamil