தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்பும், தமிழ் மக்களின் பொருளாதார நிலையும்..!

இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் அரசியல் ரீதியிலான பல இன்னல்களை தமிழினம்  சந்தித்து வந்திருப்பினும் பொருளாதார ரீதியில் நாட்டின் ஏனைய  இனத்தவர்களை விட சழைக்காதவர்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

தமிழ்மக்களின் பிரதான பொருளாதார மூலமாக வேளாண் உற்பத்திளும் மீன்பிடி போன்ற ஏனைய தொழில்களும் இருந்தமையினாலும்,  சேமிப்பில் அதிக அக்கறை கொண்டவர்களாகவும் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தங்கம் மற்றும் நிலங்களை கொள்வனவு செய்வதில் அதிக ஈடுபாடு காட்டியமையினாலும் தமிழர்களின் பொருளாதாரம் நிலையான தன்மை கொண்டதாகவும் உத்தரவாதமிக்கதாகவும் அமைந்திருந்தது.

காலப்போக்கில் ஆயுதப்போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு வடக்குகிழக்கின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு அறிவிக்கப்படாத அரசாங்கமொன்றினை அவர்கள் நடத்தியபோது ஆயுதப்போராட்ட அமைப்பொன்றினால் நிர்வகிக்கப்படும் பிரதேசத்தில் பொருளாதாரம் சீரழிந்துவிடும் என்ற பொதுவான கருத்தினை பொய்யாக்கி  ஒரு நிலையான மற்றும் தன்னிறைவு பொருளாதாரப்போக்கினை பேணுவதில் வெற்றி கொண்டுள்ளனர்  என்றுதான் கூறமுடியும்.

ஒருபுறத்தில் யுத்தம் நடந்துகொண்டிருந்தாலும் மக்கள் விவசாய உற்பத்தி ,மீன்பிடி உள்ளிட்ட வருமானங்களை ஈட்டக்கூடிய தொழில்களை மேற்கொண்டு பொருளாதாரத்தை உயர்த்திவந்தனர். இதற்கு விடுதலைப் புலிகளின் கொள்கை முடிவுகளும் உந்துதலாக அமைந்தது. உதாரணமாக உள்ளூர் உற்பத்திகளுக்கு போட்டியான பொருட்களை தென் இலங்கையில் இருந்தோ வெளிநாடுகளில் இருந்தோ இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தி உள்ளூர் உத்பத்திகளுக்கு நியாயமான விலை கிடைக்க வழிவகுத்திருந்தமையை குறிப்பிடமுடியும்.

அதுமட்டுமன்றி தனிமனித ஒழுக்கத்தை மேம்படுத்தியதன்மூலம் வீண்  விரயங்களை தவிர்த்து வந்தனர் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை ஒரு சமுக பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்குமென உணர்ந்து தமது நிர்வாக கட்டமைப்புக்களான பொருன்மிய மேன்பட்டுப்பிரிவு, நிதர்சனப்புரிவு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், வனவளப்பாதுகாப்புப் பிரிவு, வருவாய்ப்பகுதி, ஆயப்பகுதி உள்ளிட்ட நிதித்துறை, நீதித்துறை, காவல்துறை, கலை பண்பாட்டுக்  கழகம் , கல்விக்கழகம் , தமிழீழ போக்குவரத்துக் கழகம் , ஊடகம் போன்ற  பல்வேறு பிரிவுகளிலும் துறைகளிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியும் அவர்களின் வருமானத்தையும் உறுதிப்படுத்தியிருந்தனர். அக்காலப்பகுதியில் தமிழ்மக்கள் மத்தியில் நம்பகமான பணப்பரிமாற்றங்களும் இடம்பெற்றிருக்கின்றன என்பதனை விடுதலைப்புலிகளின் காவல்துறையினரிடம் பணக்கொடுக்கல் வாங்கல் பிணக்குகள் மிக அரிதாகவே முறையிடப்பட்டிருக்கின்றன என்பதிலிருந்து அறியமுடிகின்றது.அக்காலப்பகுதியில் தமிழ் மக்கள் கடன்சுமைகள் அற்றவர்களாகவும் இருந்தனர் இதனிடையே புலிகளின் கட்டுப்பாட்டுக்கு வெளியில் இருந்த தமிழ்மக்களும் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கான வியாபார நடவடிக்கைகள் மூலமாக கணிசமான வருமானங்களை ஈட்டியிருந்தனர்.

இவ்வாறாக ஆரோக்கியமான நிலையை நோக்கி பயணித தமிழர்களின்  பொருளாதாரம் 2009ம் ஆண்டு புலிகளின் மௌனிப்புக்குப் பின்னர்  தலைகீழாக  மாறிவருகின்றது.  போர் முடிவின்பின் ஏற்பட்ட சாதாரண சூழல் காரணமாக ஏற்பட்ட ஆடம்பர வாழ்க்கைமுறையும், காப்புறுதிநிறுவனங்களிதும், வாகன குத்தகை நிறுவனங்களினதும் படையெடுப்புக்களும், குழுக்கடன்கள் வழங்குகின்ற வங்கிகளின் விரிவாக்கம் போன்றன தமிழ் மக்களில் பெரும்பான்மையானோரை கடன்காறர்களாக மாற்றி அவர்களின் உழைப்புக்களை வட்டியாக அறவிட்டுவருகின்றன.

இதுவரை தங்கம் போன்ற விலை அதிகரித்துவரும் பொருட்களை கொள்வனவு செயதவர்கள் இன்று தங்கத்தை விற்று  நாளாந்தம் விலை வீழ்ச்சியடையும் தொலைக்காட்சி,  நவீன கைபேசி போன்ற இலத்திரனியல் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். தமிழ் இளைஞர்களுக்கு கிடைக்கவேண்டிய அரச வேலை வாய்ப்புக்களும் அரசியல் தலையீடுகளினால் தமிழரல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் தமிழ்மக்களின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் உற்பத்திகளை நம்பியிருக்கும் தமிழர் பொருளாதாரம்  உற்பத்நிகளுக்கான சரியான விலை கிடைக்கப்பெறாமையினாலும் பாரிய வீழ்ச்சியை கண்டுவருகின்றது நாட்டில் என்றுமில்லாதவாறு பொருளாதார சுமைகாரணமாகவும் கடன்சுமை காரணமாகவும் இளம் தமிழ் குடும்பஸ்த்தர்கள் தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்துள்ளது.

ஒப்பீட்டளவில் பார்க்கும்போது இலங்கையில் வாழும் ஏனைய இனத்தவர்களுடன்  ஒப்பிடுகையில் தமிழர்கள் யுத்த முடிவிற்கு பின்னரான காலப்பகுதியில் பொருளாதார ரீதியில் பின்னடைவையே சந்தித்து வருகின்றனர். தமிழ் அரசியல் வாதிகளின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், ஏனைய இனத்தவர்களது வியாபார தந்திரங்களும் வளச்சுறண்டல்களுமே பின்னடைவிற்கான காரணங்களாக அமைகின்றன. குறிப்பாக தமிழர்களைவிட சிறுபான்மையினராகிய முஸ்லிம்கள் அவர்களது அரசியல் தலைமைகளது பொருளாதாரம் தொடர்பான தூரநோக்கு சிந்தனையினாலும்செயற்பாடுகளினாலும் அவர்களுக்கிடையிலான ஒற்றுமைத்தன்மையினாலும், வியாபாரத் தந்திரங்களினாலும்  தமிழர்களைவிட பன்மடங்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம்கண்டு வருகின்றனர் இதனால் ஒருகாலத்தில் செல்வச்செழிப்புடன் வாழ்ந்த தமிழர்கள் தற்போது முஸ்லிம் முதலாளிகளுக்கு கூலிகளாக மாறிவருகின்றனர் இந்த நிலை தொடருமானால் தமிழர்கள் நலிவுற்ற இனமாக மாறுவதுடன் இனக்கலப்பிற்கும்  மதக்கலப்பிற்கும் உள்ளாக்கப்படும் அபாயங்களும் இல்லாமல் இல்லை .

இந்த அபாயங்களில் இருந்து தமிழ்மக்களை மீட்க வேண்டுமானால் தமிழ் அரசியல்வாதிகளிடம் பொருளாதாரம் தொடர்பான தெளிவும் அக்கறையும் இருக்கவேண்டியதுடன் புலம்பெயர் தேசங்களில் வாழுகின்ற தமிழ் தொழிலதிபர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் அவசியமாகின்றது அதே நேரம் தமிழ் மக்களும் தமது பொருளாதார நிலையினை புரிந்துகொண்டு விழிப்புடன் செயற்படுவதும் காலத்தின் தேவையாக உள்ளது.

நன்றி.

என்.ஜனா..

-athirvu.com

TAGS: